மணிமாறன், தாரா கிரீஸ், ராம் பரதன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் "கன்னி'. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது....
""இந்தப் பிரபஞ்சம் நம்முடன் எப்போதுமே உரையாடிக் கொண்டிருக்கிறது. அதன் மொழியைத்தான் யாரும் கண்டு கொள்வதில்லை. அது நமக்குப் புரிவதில்லை.புரிந்து கொண்டவர்கள் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படி இந்தப் பிரபஞ்சத்தின் மொழியைத் தெரிந்து கொண்டவர்கள் தான் நமது மூதாதையர்கள்.
எப்போதும் இந்தப் பிரபஞ்சம் நமக்கு சொல்வதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கண் திறந்து பார்ப்பதில்லை. அதனால்தான் நமக்கு இவ்வளவு அழிவுகளும் கெட்ட விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆனால் அந்தக் கிராமத்தில் அந்த மண்ணின் வேர்களாக இருக்கும் மக்கள், மண்ணோடு கலந்துவிட்ட மக்கள் அந்த பிரபஞ்சத்தின் மொழியை அறிவார்கள்.
அதைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள்.
புரியாததன் பாதிப்பு என்ன என்பதைப் பற்றி எல்லாம் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
இந்தப் படம் நமது பண்பாடு, தொன்மை வேரோடு வேரடி மண்ணாகக் கலந்துள்ள கலாச்சாரம் நமது மருத்துவ, பாரம்பரியப் பெருமை என அனைத்தையும் பேசி இருக்கிறது. அதற்கான பாதையில் செல்லும் கதையில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றியும் சொல்கிறது.'' என்றார் இயக்குநர்.