

பி. ஆ.ர் டாக்கீஸ் கார்ப்பொரஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சுரேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். காவல் துறை உங்கள் நண்பன் படத்துக்குப் பின் இதே தயாரிப்பு நிறுவனமும் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் நகைச்சுவையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதிரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் பாலையா. இயக்குநர் பேசும் போது...
""அங்கீகாரமும், அடையாளமும்தான் இங்கே முதன்மையானதாக இருக்கிறது. எல்லோருமே அதற்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். தோல்விதான் வாழ்வின் சாபம். தோல்வியை புத்தி கூர்மை இருந்தால் சமாளித்து விடலாம். அது ஒரு அனுபவம். இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகிறது. இதெல்லாம் எதன் பொருட்டு என யோசித்துப் பார்த்தால், இலக்குகள்தான் முன்னுக்கு நிற்கிறது. இப்படி அதன் போக்கில் யோசித்து எழுதிய கதைதான் இது.
திறமைகளோடு சாமானியர்களாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் கதை இது. காலத்தின் நிராகரிப்புதான் இருப்பதிலேயே பெரிய வலி. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.