நீதிமன்றங்களின் வளர்ச்சி...
By தங்க. சங்கரபாண்டியன் | Published On : 24th September 2023 05:59 PM | Last Updated : 24th September 2023 05:59 PM | அ+அ அ- |

இந்தியர்கள் முன்சீப்பாக நியமனம் செய்யப்படுவது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரிது. பிரிட்டனில் சட்டம் (ஐ.சி.எஸ்.) படித்து இந்தியாவுக்கு நீதிபதிகளாக ஆங்கிலேயர்கள் வந்தனர்.
1891-ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, 1855-ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் ஒரு பாடமாக இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டிலும், சட்டக் கல்லூரி 1891-ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டன. 1891-ஆம் ஆண்டு ஆக.
15-இல் சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
அந்த நாள்களில் நீதித் துறையும், வருவாய்த் துறையும் ஒன்றாக இருந்தன. குமாரசாமிராஜா முதல்வராக இருந்தபோது, இரு துறைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.
முன்சீப்பான முதல் இந்தியர்: ஆங்கிலேயர் ஆட்சியில் முன்சீப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் வேதநாயகம் பிள்ளை. அந்தக் காலத்தில் தமிழில் "பிரதாப முதலியார் சரித்திரம்' எனும் நூலை எழுதியவர் இவர்தான்.
1857-ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை தரங்கம்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் முன்சீப்பாக நியமிக்கப்பட்டார்.
இவர் சட்டக் கல்லூரியில் படித்தவர் அல்ல.
நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை திருச்சி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்த தியாகப் பிள்ளையிடம்தான் ஆங்கில மொழியை கற்றார். அவரது உதவியால் நீதிமன்றத்தில் பதிவுத் துறை எழுத்தரானார். பின்னர், முன்சீப் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று, பதவியும் பெற்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...