மதுரையில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வகையில் சமய நூலகம் இயங்கிவருகிறது. அழகர்கோயில் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோயிலில் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து ஒரு கி.மீ. உயரத்தில் நூபுரகங்கை நீரூற்று அமைந்துள்ளது.
ஒரு மலையில் மூன்று ஆன்மிகத் தலங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமல்ல; கல்விக் கண்ணைத் திறக்கும் பள்ளியும், அறிவுக் கண்ணைத் திறக்கும் நூலகத்தையும் இந்தக் கோயில் நடத்திவருகிறது.
1936-ஆம் ஆண்டு டிச. 29-இல் மதராஸ் இந்து மத தர்ம பரிபாலன வாரிய ஆணையர் சுந்தர ரெட்டியால் ஆயிரம் நூல்களுடன் திறக்கப்பட்ட நூலகத்தில் இன்று பல ஆயிரம் நூல்களாகப் பெருகி சேவை செய்துவருகிறது.
அழகர்கோயிலை ஒட்டி வாழும் சிறார்கள் பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கலாம். . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை கள்ளழகர் கோயிலில் "பக்தி மணம் ஒருபுறம் கமழ மறுபுறம்' என கோயில் வளாகத்தில் நூல் வாசிப்பும் ஒன்று சேர்க்கிறது.
இங்கு இயங்கும் நூலகத்தின் பெயர் "சமய நூல் நிலையம்". இது 88 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நாளிதழ்கள் பக்தர்களின் வாசிப்புக்காகவும், மாணவர்களின் பொது அறிவுக்காகவும் வாங்கப்படுகின்றன. சமய பக்தி இதழ்கள் ஒரு பக்கம் பக்தர்களைக் கவர, சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆன்மிக நூல்களும் உள்ளன,.
இந்நூல் நிலையத்துக்கு இந்து சமய நூல்களை அன்பளிப்பு செய்யலாம் என்ற அறிவிப்புப் பலகையும் நுழைவு வாசலின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நூல்களை வீட்டுக்குக் கொண்டு சென்று வாசித்து, திரும்ப அளிக்கும் நடைமுறை இங்கு இல்லை.