மத நல்லிணக்கத்தின் அடையாளம்

மத நல்லிணக்கத்தின் அடையாளம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்டமான இந்து கோயில் உலகின் மனிதநேய சகோதரத்துவத்தைப் பறைசாற்றும். இதன்மூலம் புதிய வரலாற்றையும் செதுக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி விரும்பியதன்பேரில், அபுதாபியில் ரூ.700 கோடி மதிப்பில் இந்து கோயில் உருவாகி அவரால் கடந்த பிப். 14-இல் முறைப்படி பூஜை வழிபாட்டு முறைகளோடு திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் மிகவும் பெரிய கற்கோயில் இது.

ஓர் இஸ்லாமிய நாட்டின் ஆட்சியாளர்கள் இந்து கோயிலுக்கு நிலம் அளித்துள்ளனர். கோயிலின் முன்னணி கட்டடக் கலைஞர் கிறிஸ்தவ கத்தோலிக்கர். திட்ட இயக்குநரோ சீக்கியர். தலைமை ஆலோசகரும் அடிப்படையில் நாத்திகர். அடித்தளத்தை வடிவமைத்தவர் ஒரு பெளத்த மதத்தைச் சேர்ந்தவர். கோயில் இயக்குநர் ஜெயின். கோயில் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பார்சிகள், இப்படியாக உருவாக்கப்பட்ட மத நல்லிணக்கத்தின் சான்று இந்தக் கோயில்.

"துபாய் டேரா' எனப்படும் பகுதியில் சிறிய அளவில் சிவன் கோயில் ஒன்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. தற்போது "துபை ஜபல் அலி' எனும் இடத்தில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கட்டடங்கள் , வியத்தகு சாலைகள், கண்ணைப் பறிக்கும் மின் விளக்குகள் போன்றவையே ஐக்கிய அமீரகத்தின் அடையாளங்களாக இருந்த நிலை மாறி, பிரம்மாண்டமான சாட்சியாக அபுதாபி இந்து கோயில் நிற்கிறது.

கோயில் உருவானது எப்படி?: 2015-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப்பயணமாக அமீரகத்துக்கு முதல் முறையாக வருகை புரிந்தபோது, அவரது வேண்டுகோள்பேரில் இந்து கோயில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. துபை-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் (5.5 ஹெக்டேர், அதாவது 27 ஏக்கர்) இடம் அபுதாபி அரசு சார்பில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசரும், தற்போதைய அமீரக அதிபருமான ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

கட்டுமானப் பணிகளை குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட ஆமதாபாத்தைச் சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷôர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு மேற்கொண்டது. இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரை மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்மாணித்து நிர்வகித்து வருகிறது.

அபுதாபிக்கு 2017-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோயில் கட்டுமானத் திட்டங்களைக் கேட்டறிந்தார். பின்னர், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி அபுதாபியில் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை மோடி துபையில் இருந்து காணொலிக் காட்சி முறையில் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில், துபை ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோயில் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜக்கிய அமீரகத்தில் உள்ள துபை, அபுதாபி, சார்ஜா, உமல் குயின், அஜ்மன், ராசல், கைமா ஆகிய ஏழு மாகாணங்களைக் குறிக்கும் வகையில் எழு கோபுரங்களை உள்ளடக்கிய கோயில் அமைப்பு மாடல் அமைந்திருந்தது.

கோயிலில் நாராயணர், ராதா கிருஷ்ணர், ராமர், சீதை, சிவன், பார்வதி, ஜெகநாதர், வேங்கடேசுவரர், ஐயப்பன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அமீரகம் அதிகப்படியான வெப்ப நிலை உள்ள பகுதி என்பதால் அதிகப்படியான சூரிய வெப்பத்தைத் தாங்கக் கூடிய கற்களைக் கொண்டு எழுப்ப வேண்டும் என்கிற அடிப்படையில், ராஜஸ்தான் பிங்க் கற்கள், மணற் கற்கள், இத்தாலிய பளிங்குக்கற்களால் அமைக்கபட்டுள்ளன.

கோயில்களில் 402 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் ராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை, மகாபாரத வரலாற்று புராணங்களை வடிவமைத்துள்ளனர்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் அற்புதமாகக் காட்டும் வகையில், அழகிய மாடம் உட்புறத்தில் நிறுவப்பட்டுள்ளது.

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மையின் சின்னமான அமீரகத்தின் ஒட்டகமும் அதனோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் அற்புதமாக நிர்மாணிப்பதற்கு 800-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் கற்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மிக சிறந்த சிற்பிகள் வடிவு அமைப்பாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

"இந்தக் கோயில் உருவாக்கியவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அதை பார்வையிடும் அனைத்து தரப்பு மக்களுக்குச் சொந்தமானது. இங்கு வருகை தரும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் இடமாக அமைவதோடு, அன்பு, நல்லிணக்க செய்தியை உலகமெங்கும் பரப்பும். பண்பாட்டு பன்முகத்தன்மைக்கு ஒரு பிரகாசமான உதாரணமான இளஞ்சிவப்பு மணற்கல் கோயில். அவர்களின் மதம் அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் திறந்திருக்கும்' என்று ஹிந்து மந்திர் (கோயில்) திட்டத் தலைவர் பூஜ்ய பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்துள்ளார்.

1997-ஆம் ஆண்டில் இந்து மத ஆன்மிகத் தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், ஷார்ஜாவில் உள்ள ஒரு பாலைவனத்துக்குச் சென்று உரையாடியபோது, ""அனைத்து கலாசாரங்கள், நாடுகளுக்கு இடையே அன்பும் நல்லிணக்கமும் இருக்கின்றன. அபுதாபியில் ஒரு கோயில் கட்டப்படும், அது நாடுகளையும், கலாசாரங்களையும், மதங்களையும், சமூகங்களையும் நெருக்கமாக்கட்டும்'' என்றார். அவருடைய கனவு தற்போது முழுமையாக நனவாகியுள்ளது.

- சுபாஷ் சந்திரபோஸ் ராஜவேலன், துபை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com