உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் மிசோரமில் இருக்கிறது. வீட்டுத் தலைவர் ஜியோனா சனா. இவருக்கு 39 மனைவிகளும், 94 வாரிசுளும் உள்ளனர். இவர்களோடு வாரிசுகளின் பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் 181 பேரும் சண்டை- சச்சரவு இல்லாமல், ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் ஆச்சரியம்.
மிஜோரமில் உள்ள பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா. இவர் தனது 17-ஆவது வயதில் முதல் திருமணம் செய்துகொண்டார். பலகால இடைவெளிகளில் ஜியோனா பல மனைவிகளைத் திருமணம் கொண்டார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை ஜியோனா திருமணம் செய்திருக்கிறார்.
அந்த வீட்டில் ஒரே சமையல் அறை. பெரிய டைனிங் ஹாலில்தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள். ஒருநேர உணவுக்கு சுமார் 80 கிலோ அரிசியும், 60 கிலோ உருளைக் கிழங்கும் தேவைப்படுகின்றன.
""மனைவிகள், குழந்தைகள் இடையே எந்தப் பாகுபாட்டையும் நான் காட்டுவதில்லை. அனைவரிடமிருந்து ஒரே மாதிரியான அன்பும் பாசமும் கிடைக்கின்றன. அதிகப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த மனைவியும் என்னிடம் கோபம் கொள்ளவில்லை. எல்லா மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான முறையில் வாழ்க்கையை அமைத்து தந்துள்ளேன்'' என்று கூறியிருந்தார் ஜியோனா சனா.
நான்கு மாடிகளைக் கொண்ட வீட்டில் நூறு படுக்கை அறைகள் உள்ளன. ஜியோனாவின் வீடு அடுக்குமாடிக் கட்டடம் என்பதால் அங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றன என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால், ஒரே குடும்பம்தான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் காரணமாக, ஜியோனா இறந்தார். அப்போது அவருக்கு வயது எழுபத்து ஆறு. ஒரே கட்டடத்தில் வாழ்ந்து வந்தாலும் குடும்பங்களுக்குள் போட்டி, பொறாமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
இந்த ஆச்சரியக் குடும்பத்தை, அவர்கள் வசிக்கும் வீட்டைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தவறாமல் வந்து செல்கின்றனர்.