

அதிக சம்பளம், குறைந்த பொறுப்புகளே உள்ள வேலை போன்றவை இன்றைய இளைஞர்களை அதீத நுகர்வுக் கலாசாரத்துக்குள் தள்ளி விடுகிறது. இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்கள் பொருள்களை விற்றுத் தீர்க்கும் மையமாகத் திகழும் இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன.
÷இந்த அதீத நுகர்வு கலாசாரமே கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையின் போது வேலையிழந்த நமது ஐ.டி. இளைஞர்களை நிலைகுலைய வைத்தது. அப்போதுதான் சேமிப்பின் முக்கியத்துவமும் உணரப்பட்டது. இந்திய பொருளாதாரம் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதால்தான் பொருளாதார தேக்கநிலையில் இருந்து விரைவில் மீண்டது என்பது அப்போது கண்கூடாக உணரப்பட்டது.
÷இப்போது இளைஞர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிறுவனங்கள் முக்கியமாக ஐ.டி. நிறுவனங்கள் கவுன்சலிங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. ÷ஃசாப்ட்வேர் துறையில் ஆரம்ப சம்பளமே ரூ. 25 ஆயிரத்துக்கும் அதிகம் என்பது இளைஞர்கள் பலரை எண்ணம் போல செலவு செய்யத் தூண்டுகிறது. அதுவரை தங்கள் தந்தையின் கையை எதிர்பார்த்து இருந்தவர்கள், அதிக சம்பளம் கிடைத்தவுடன் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கத் துடிக்கின்றனர். எதிர்காலத்துக்கான சேமிப்பின் அவசியத்தை அப்போது அவர்கள் உணர்வது இல்லை. இதுவே முந்தைய நிலையாக இருந்தது.
÷ஆனால் இப்போது பல ஐ.டி. நிறுவனங்கள் சிறந்த நிதி ஆலோசகர்கள் மூலம் தங்கள் இளம் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு முறைகள் மற்றும் அதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் பயன்களை விளக்குகின்றனர்.
÷இதுதவிர பணத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் முதலீடு செய்வது என்பது குறித்தும் இளைஞர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. இதில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
÷வரும் காலத்தில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டாலும், வேலையிழப்பு ஏற்பட்டாலும், சேமிப்பும், முதலீடும் இளைஞர்களை நிச்சயமாகக் காக்கும்.
÷ஐ.டி. துறை மட்டுமின்றி இளைஞர்கள் அனைவருமே சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்கள் வருமானம் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதில் ஒருபகுதியை எதிர்காலத்துக்காக சேமிப்பது எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
÷சேமிப்பு என்பது பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விஷயம்தான் என்றாலும் இன்றைய கார்பரேட் கலாசாரத்தில், எதுவுமே நிலையில்லை என்பது மட்டுமே உண்மை. எனவே நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் சேமிப்பு அதிக முக்கியத்துவம் பெறும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து.
÷இன்றைய இளைஞர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் பணத்தைக் கொட்டி அந்தந்த நாளை அனுபவிக்கத் துடிக்கும் பொறுப்பற்றவர்கள் என்பதே பெரும்பாலானவர்களின் (பெற்றோர் உள்பட) குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இளைஞர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளதால், இந்த நிலை விரைவில் மாறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.