மணவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தாலும் சரி, எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட வேண்டும். படிக்கும்போது மனம் ஒன்றவில்லை என்றால் எவ்வளவு நேரம் படித்தும் பயனில்லை. வேலை செய்யும்போது மனம் ஒன்றவில்லை என்றால் வேலையில் தவறுகள் ஏற்பட்டு விடும்.
எந்தச் செயலிலும் மனம் ஒன்றிச் செயல்பட சில உணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள் சத்துணவு நிபுணர்கள்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள எந்த உணவையும் உண்ணலாம். ஆளி விதை, பாதாம் பருப்பு ஆகியவற்றில் ஒமேகா 3 அதிகமுள்ளது. அவற்றைச் சேர்த்துக் கொண்டால் கவனச் சிதறல் ஏற்படாது.
வைட்டமின் ஏ,சி,இ உள்ள உணவுகள் மனம் ஒன்றிச் செயல்பட உதவும். தக்காளி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்றவற்றில் இந்தச் சத்துகள் அதிகமாக உள்ளன. இவை மூளையில் உள்ள செல்களுக்கு அதிக ஆக்சிஜனைத் தருகின்றன.
உடனடியாக உற்சாகமாக வேலை செய்யத் தேவை காஃபின் சத்து. கிரீன் டீ, கறுப்பு சாக்லேட் ஆகியவற்றில் உள்ளது. ஆனால் குறைந்த அளவே இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
வைட்டமின் பி6 மற்றும் பி12 உள்ள உணவுகள் கவனம் சிதறாமல் செயல்களில் ஈடுபட உதவும். நினைவாற்றலை அதிகரிக்கும். மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் வைட்டமின் பி6, பி12 அதிகம் உள்ளது.
நார்ச்சத்துள்ள எல்லா காய்களிலும், கனிகளிலும், விதைகள் மற்றும் பருப்பு வகைகளிலும் மூளைக்குத் தேவையான அவசியமான சத்துகள் உள்ளன. மேலும் இவை உடலுக்குத் தேவையான, போதுமான சக்தியை தொடர்ந்து அளிப்பவையாக உள்ளன. எனவே சரியான,தேவையான சத்துகள் உள்ள உணவை உட்கொண்டு எந்தச் செயலிலும் மனம் ஒன்றிச் செயல்படுங்கள். வெற்றியை நோக்கிப் பயணியுங்கள்.