தீபாவளி சிறப்புக் கவிதை
அந்த
ஒளி வெள்ளத்தை
அள்ளிப் பருகலாமெனத் தோன்றும்
புஸ்வாணம்
புஸ்பித்து பொழிவதிலிருந்து
ஆனந்தத்தை அப்படியே வாங்கி
பதுக்கலாம்
தாறுமாறாய் வெடித்து
சிதறிக் கிடக்கும் பட்டாசுகளின்
தாள்களிலிருந்து
காகிதம் தயாரிக்கலாம்
சிறார்களின்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டுவரும்
சந்தோச குரலானது
தீபத்தின் முகத்தில்
வெற்றியை பொருத்துகிறது
ஒவ்வொரு
பட்டாசின் வெவ்வேறான
வெடிப்புகளின்
நீளொலிக்கு ஏற்ப
இல்லம் ஒளி நடனம்
புரிகிறது
இன்னாரென்றில்லாது
எல்லாரின்
மனக்கால்களும் இறங்கி களிக்கும்
ஒளிக் களமானது
ஒருமைப்பாட்டினை விவரிக்கிறது
கதிரொளியா
நிலவொளியா என
இல்லாது காணும்
இந்திய நிலப்பரப்பினில்
ஒளி நடவு
நடந்துகொண்டிருக்கிறது
இதில்
மகிழ்ச்சியும் அழகும்
மனக்குளத்தில்
நீச்சலடித்துக் குளிக்கும்
லயிப்பில்
மனம் பட்டாம்பூச்சியாகிறது.