

தலைவலி என்றாலே நினைவுக்கு வருவது தைலம்தான். இதில் நீலகிரி தைலம் என அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்துக்கு மவுசு கொஞ்சம் அதிகமே. உடலுழைப்பையே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த தைலம் காய்ச்சும் தொழிலில் கடின உழைப்பாளிகள் குறைந்துவிட்ட நிலையில், தற்போது பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி தைலம் தயாரிக்கும் தொழிலைப் பற்றி அத்தொழிலில் ஈடுபட்டு வரும் உதகையைச் சேர்ந்த எம்.மோகன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
""நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், தைலத்துக்கு அனைத்து தரப்பினரிடத்திலும் கிடைக்கும் வரவேற்பின் காரணமாகவும், இம்மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கும் யூகலிப்டஸ் மர இலைகளிலிருந்து தைலம் காய்ச்சும் தொழிலைத் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளிலும், கேரளத்தில் மூணாறிலும் மட்டுமே யூகலிப்டஸ் தைலம் காய்ச்சப்படுவதால் இப்பகுதிகளில் மட்டுமே தைலத் தொழிலுக்குத் தேவையான தொழிலாளர்கள் உள்ளனர்.
யூகலிப்டஸ் இலைகளைச் சேகரித்து, அவற்றை பெரிய உலைகளில் கொதிக்க வைத்து, அதிலிருந்து வெளியாகும் ஆவியைக் குளிர வைத்து, வடிகட்டி தயாரிக்கப்படுவதுதான் யூகலிப்டஸ் தைலம். கடின உழைப்பாளிகளால் மட்டுமே இதைச் செய்ய முடியும். மாதத்துக்கு குறைந்தது ரூ.15,000 வரை வருமானம் கிடைக்கும்.
இதைத் தவிர, வெளி மாநிலங்களிலுள்ள வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டு கூடுதல் விலைக்கும் தைலத்தை விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
உதகையில் 50-க்கும் மேற்பட்ட தைலம் காய்ச்சும் தொழிலகங்களில் படித்த இளைஞர்கள் பலர் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். தைலம் காய்ச்சும் இடங்களில் லிட்டருக்கு ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. தைலம் காய்ச்சும் தொழில் செய்தால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கேற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும். கடின உழைப்புக்கு அஞ்சாத
இளைஞர்கள் தாராளமாக இத்தொழில் ஈடுபடலாம்''என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.