

உலக அளவில் செல்லிடப்பேசி மூலமாக இணையத்தை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 1800 மில்லியன் அளவையும் தாண்டியுள்ளது. இந்த அளவானது கணினி மூலம் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
இந்நிலையில் செல்லிடப்பேசியில் இணையத்தை பெரும்பாலும் பார்வையிட மட்டுமே முடிகிறது. மேலும் மின்னஞ்சல் அனுப்பும் போதும், சமூக வலைத்தளங்களில் பதில் அனுப்பும்போதும், தகவல்களை சுருக்கமாகவே தட்டச்சு செய்ய வேண்டிய நிலையுள்ளது. வேகமாகவும், அதிகமாகவும் தகவல்களைத் தட்டச்சு செய்வதற்கான வசதி செல்லிடப்பேசியில் இல்லாததே இதற்குக் காரணம்.
பலர் செல்லிடப்பேசியில் உள்ள இணைய இணைப்பை மட்டும் கணினிக்கு மாற்றம் செய்து கணினியில் உள்ள இயங்குதளத்தில் தங்களுக்கான இணையத் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
செல்லிடபேசியில் உள்ள தகவல்கள், அப்படியே பெரிய அளவில் கணினி திரையில் தெரியும் வகையிலும், மவுஸ், விசைப் பலகையை இயக்கும் வகையிலும் இருந்தால் வசதியாகத்தானே இருக்கும்?
இந்த வசதியைத்தான் அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஸ்பிளே டாக் (Display Dock) எனும் கருவி. இந்தக் கருவியில் செல்லிடப்பேசி, கணினி திரை (Monitor), மற்றும் விசைப் பலகையை (keyboard) இணைத்து பயன்படுத்தலாம்.
இதன் மூலம் செல்லிடப்பேசி தகவல்கள் மற்றும் வீடியோக்களை தெளிவான (HD) தரத்துடன் திரையில் காண முடியும். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள விண்டோஸ் இயங்குதள லுமியா-950 வகையான செல்லிடப்பேசிகளில் மட்டுமே இக்கருவி இயங்கும். இதன் விலை ரூ. 5999.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.