இளம் தொழில்முனைவோரா... கவனியுங்கள்!
By - விகேஎம் | Published On : 15th December 2020 06:00 AM | Last Updated : 15th December 2020 06:00 AM | அ+அ அ- |

இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள்,பொறியியல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என நினைத்து வீடுகளில் முடங்கி கிடந்து வருகின்றனர்.
தாங்கள் படித்த கல்வியைப் பயன்படுத்தி , ஒரு சிறு தொழிலை உருவாக்கி அதன் மூலம் சிலருக்கு வேலை கொடுக்கலாம் என்ற சிந்தனை பலருக்கு வருவது இல்லை. ஆனால், அப்படி மாற்றுச் சிந்தனையுடன் தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கிய பலர் இன்று உலகமேவியக்கும் அளவிற்கு முன்னேற்ற மடைந்துள்ளனர்.
முயற்சியும், உழைப்பும், பயிற்சியும் இருந்தால் ஒவ்வொருவரும் தொழில் முனைவோராக மாறலாம். உலகம் முழுவதும் இளம் தொழிலதிபர்கள் கோலோச்சும் காலம் இது. சாதிக்க நினைக்கும் ஒவ்வோர் இளைஞனும், ஏற்கெனவே சாதித்தவர்களின் வரலாற்றையும், அவர்களின் உழைப்பையும் மனதில் கொண்டு செயல்பட்டால் இளம் தொழில்முனைவோராகத் தங்களைத் தயார்படுத்தி வெற்றி பெறமுடியும்.
அப்படி தொழில்முனைவோராக வலம் வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளையும், பயிற்சிகளையும் அளித்து வருகின்றன. தமிழ்நாட்டில் என்ட்ரப்ரோனர்ஷிப் டெவலப்மென்ட் அண்ட் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட் அத்தகையை இளம் தொழில்முனைவோர்களுக்கு உரியபயிற்சிகள், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.
இத்தகைய தொழில்முனைவு மேம்பாட்டு மையங்கள் அந்தந்த மாநில அரசாலும், மைக்ரோ, ஸ்மால்& மீடியம் என்டர்பிரைசஸ் மற்றும் அதன் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டாலும் (எம்எஸ்எம்இ - டிஐ) நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
தொழில்முனைவு மேம்பாட்டு மையம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளின் நிபுணர்களைக் கொண்டு உரிய பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. பயிற்சி வழங்குவதற்காக ஏராளமானபயிற்றுநர்கள் உள்ளனர்.
தொழில்முனைவோராக உயர வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கு நடைபெறும் ஒரு நாள் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இப்படி பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு தொழில்கள் குறித்தும் அதற்கான வாயப்புகள் குறித்தும் 7 நாள் பயிற்சி வழங்கப்படும்.இத்தகைய பயிற்சிகள் மூலம் தொழில்முனைவோர்கள் தங்களுக்குத் தகுதியான வணிகம் குறித்த திட்டமிட முடியும். அப்படி திட்டமிட்டவர்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான(வங்கி மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்கள்) பெறுவதற்கான செயல்முறைப் பயிற்சி அளிக்கப்படும். வங்கி அல்லது அரசின் மூலம் நிதியைப் பெற்ற பின்னர் புதிய தொழிலைத் தொடங்கி நடத்துவதற்கான பயிற்சியையும் உடனிருந்து தொழில்மேம்பாட்டு மையம் மேற்கொள்ளும். உரிய பயிற்சியுடன், எதிர்கால திட்டமிடல்களுடன் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலுடன் , இளைஞர்கள் வங்கிகளை அணுகும் போது, அவர்கள் வங்கியால் நிராகரிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும், தொழிலைத் தேர்வு செய்வது, சந்தை வாய்ப்பு, தொழிலின் சாதக, பாதகங்கள், வங்கி கடன், தொழிலுக்கான அரசின் சலுகைகள், தொழிலுக்கான புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பது, வரவு,செலவைப் பராமரிப்பது, தொழில் சட்டங்கள், சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்கான பயிற்சிகளையும் நிபுணர்களைக் கொண்டு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் வழங்குவதால் தொழில்முனைவோர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களைப் பெற்று பலனடைய முடியும். இதற்காக கட்டணம் பெறப்படுவதில்லை.
அத்துடன் தொழில்முனைவோருக்கென பல்வேறு தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் திட்டங்களான அன்எம்ப்ளாய்டு யூத் எம்ப்ளாய்மென்ட் ஜெனரேஷன் புரோகிராம், பிரைம் மினிஸ்டர் எம்ப்ளாய்மென்ட் ஜெனரேஷன் புரோகிராம், நியூ என்ட்ரப்ரோனர்ஷிப் கம் எண்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் ஸ்கீம் போன்ற திட்டங்களில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கும் தொழில்முனைவுப் பயிற்சிகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் https://www.editn.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று லாக்-இன் மெனுவை கிளிக் செய்து தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அப்பக்கத்திலுள்ள சர்வீசஸ், ரிசோர்சஸ், ஈவன்ட் போன்ற மெனுக்களை கிளிக் செய்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவனம், (என்ட்ரப்ரோனர்ஷிப்
டெவலப்மென்ட் அண்ட் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட்),
பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காடுதாங்கல்,
சென்னை-32
044-2225 2081/82/83
044-2225 2085
மின்-அஞ்சல்: ஹள்ள்ற்க்ஃங்க்ண்ற்ய்.ண்ய் ஹக்ம்ண்ய்
ஃங்க்ண்ற்ய்.ண்ய் என்ற முகவரியை அணுகுங்கள்.