
"ஐஏஎஸ் எனது லட்சியம் ... இலக்கு. மாடலிங், அழகிப் போட்டிகளில் பங்கு பெறுவது, எனது பொழுதுபோக்கு' என்கிறார் ஐஸ்வர்யா ஷெரன்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய தரப்பட்டியலில் ஐஸ்வர்யா ஷெரன் 93 -ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்திய அரசின் ஆட்சிப்பணி தேர்வில் தன்னைத் தயார் செய்து கொள்ள எந்த பயிற்சி நிலையத்திலும் சேராமல், சொந்தமாகப் படித்து தேர்வு பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ஷெரன்.
ஐஸ்வர்யா டில்லி பல்கலைக் கழக மாணவி. 23 வயதாகும் ஐஸ்வர்யா "மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் கடைசி சுற்றுவரை பல தேர்வுகளைத் தாண்டி வந்தவர். ஐஸ்வர்யாவின் சொந்த மாநிலம் ராஜஸ்தான்.
""அப்பா ராணுவத்தில் கர்னலாக பணி புரிந்தவர். மும்பையில் குடியேறியதும் மாடலிங் உலகில் பிரபலமானேன். அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். பிரபல டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் ஆடை அணிவகுப்பில் மாடலாகப் பங்குபெற்றுள்ளேன்.
ஃபேஷன் இதழ்களுக்காகவும் மாடலாக இருந்திருக்கிறேன். படிப்பிலும் நான் திறமைசாலியாக இருந்ததால் ஐஏஎஸ் கனவு என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. "சரி... எத்தனை நாள்தான் ஐஏஎஸ் கனவைத் தள்ளிப் போடுவது... முயற்சி செய்து பார்ப்போமே' என்று ஐஏஎஸ் தேர்வுக்காக என்னைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டேன்.
எனது வாழ்க்கைக்கான திருப்புமுனைப் பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்தது மட்டுமல்ல.. வெற்றிகரமாகச் சாதித்தும் இருக்கிறேன் என்பது எனக்கும், என் பெற்றோருக்கும், நட்புகளுக்கும் நிறைவு தரும் விஷயமாக அமைந்துவிட்டது.
பணியில் சேர்ந்ததும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்களுக்கு வல்லமை சேர்க்கும் முயற்சிகளிலும், பெண்கள் கல்வி, பெண்களுக்கான மருத்துவம் குறித்தும் கவனம் செலுத்துவேன்'' என்கிறார்ஐஸ்வர்யா ஷெரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.