செய்திப் படங்களை இயக்கி முத்திரை பதித்திருக்கும் ஷெர்லி ஆபிரகாம், ஆஸ்கர் விருதின் நடுவர் குழுவில் உறுப்பினர் ஆகியுள்ளார். போபாலில் பிறந்து வளர்ந்த ஷெர்லி தற்சமயம் வாழ்வது மும்பையில். இந்தியாவிலிருந்து நடுவர்களாக செல்லும் மூன்று பேர்களில் ஷெர்லியும் ஒருவர்.
ஆஸ்கர் விருது நடுவராக வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து ஷெர்லி சொல்வது:
""என்னைப் பொருத்தவரையில் இது மாபெரும் வாய்ப்பு. ஆஸ்கார் தொடர்பான நிகழ்வுகளில் பங்கு பெறுவது குறித்து கனவு கண்டிருக்கிறேன். அது இத்தனை சீக்கிரம் நனவாகவும் என்று நான் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. ஆஸ்கருக்காக நடுவராக இருப்பது மிகவும் பெருமை என்றாலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதிகமானப் படங்களைப் பார்த்து தர வரிசை செய்து விருதிற்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
"ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். முதுகலை முடித்ததும் எனது லட்சியம் திசை மாறி படம் பிடிப்பதும் தயாரிப்பதும் எனது களமாக உருவெடுத்தது. பள்ளிப் படிப்பின் போது திரைப்படங்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கும் என்றாலும் பெற்றோருக்குப் பிடிக்காது. பிற்காலத்தில் செய்தி, ஆவணப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன்.
இந்தியாவில் திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. செய்தி மற்றும் ஆவணப் படங்கள் பல விஷயங்களைக் கற்றுத் தருபவை என்ற எண்ணம் இருப்பதால் செய்திப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் குறைவு. அதனால் ஜனரஞ்சக திரைப்படங்களை போன்று அநேக பார்வையாளர்களைச் செய்தி, ஆவணப் படங்கள் சென்று அடைவதில்லை.
செய்தி ஆவணப் படங்களைத் தயாரிப்பதில் பணம் முடக்க பலரும் முன்வருவதில்லை. தயக்கம் காட்டுகிறார்கள். பட நிறுவனங்கள் திரைப் படங்களைத் தயாரிக்க மட்டுமே முனைப்பு காட்டுகிறார்கள். அதுதான் அவர்களின் வருவாய்க்குப் பாதுகாப்பான வழி என்று நினைக்கிறார்கள். அதனால் குறைந்த செலவில் தயாராகும் செய்திப் படங்கள் ரசிகர்களைக் கவருவது இல்லை. செய்தி ஆவணப் படங்களைத் தயாரிக்க தேவையான நிதி கிடைக்காததால் இந்தத் துறை இந்தியாவில் பெரிதாக வளரவில்லை'' என்கிறார் ஷெர்லி ஆபிரஹாம்.