கதம்பம்!: பட்டு ராணி!

ஏறத்தாழ கி.மு.2696 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் பெரும் பகுதியை மஞ்சள் பேரரசர் ஹுவாங்-டி அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.
கதம்பம்!: பட்டு ராணி!
Updated on
2 min read

ஏறத்தாழ கி.மு.2696 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் பெரும் பகுதியை மஞ்சள் பேரரசர் ஹுவாங்-டி அரசாட்சி செய்து கொண்டிருந்தார். அவருடைய 14 வயதே நிரம்பிய இளம் மனைவி லைசு என்ற ஜிலிங் ஷி. மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் சூடான தேநீரை அருந்திக் கொண்டே இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பெரிய கொட்டை வடிவத்திலிருந்த கூட்டுப் புழுவானது அவளின் தேநீர் கோப்பைக்குள் விழுந்தது. அருவருப்புடன் உற்று நோக்கிய இளவரசி, அக்கூண்டானது தனித்தனி நூல்களாகப் பிரிவதை மிக வியப்புடன் பார்த்தாள். அந்நூல்கள் மிருதுவான வலிமையான நீண்ட இழைகளால் ஆனது என்பதைக் கண்டாள்.

மெல்லிய பட்டு இழைகளை இணைத்து எவ்வாறு பட்டு நூலினை உருவாக்குவது என்று பின்னர் லைசு கண்டறிந்தார். விரைவில் முசுக்கொட்டை மரக்காடுகளை உருவாக்கிய பின்னர் சீனாவில் மற்ற இடங்களுக்கும் பட்டு எடுப்பது எவ்வாறு என்பது குறித்து அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார்.

பட்டு சீனாவின் மிக மதிப்புமிக்க பொருளாகும். சீனர்கள் பட்டு அணிவதை மிக கெளரவமாகக் கருதினார். பட்டினை ஆரம்பக் காலங்களில் அரசர்கள் மற்றும் உயர்குடிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். வணிகர்களும்-பொதுமக்களும் பட்டு அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சீனாவிலுள்ள பல அரசுகள் பணத்திற்குப் பதிலாகப் பட்டினையே பயன்படுத்தி வந்தன. 

சீன சட்டமானது ஒரு வெளி நாட்டவர் பட்டின் ரகசியத்தைத் திருட முயன்றால் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அடிமையாக்கப்படுவார்கள். ஒரு சீனர் அரசின் ரகசியத்தைக் கடத்த முற்படுவானாயின் கொடுமையான முறையில் கொல்லப்படுவான். பேரரசர்களின் காவலர்கள் பயணிகளையும், வியாபாரிகளையும் கண்காணிப்பார்கள். 

கி.மு.2-ஆம் நூற்றாண்டில் சுமார் 5 ஆயிரம் கி.மீ நீளத்திற்கு 8 மீட்டர் உயரமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட மாபெரும் சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் காவலர்களின் வேலை மிகவும் எளிதானது.

இப்பெருஞ்சுவர் மங்கோலிய நாடோடிகளிடம் இருந்து சீனாவைக் காக்கக் கட்டப்பட்டது. "மங்கோல்' என்னும் சொல்லுக்கு "குதிரையின் முதுகில் வாழும் மக்கள்' என்று அர்த்தம். "அருகில் இருக்கும் நெருப்பு' என்றொரு அர்த்தமும் உண்டு. சுவரொன்று கட்டினால் மனிதர்கள் அதைத் தாண்டி வருவது பிரமாதமான காரியம் இல்லையே!

ஆனால் குதிரைகள் வர முடியாது அல்லவா? சீனப் பெருஞ்சுவர் கட்டுவதற்கு முக்கிய நோக்கம் மங்கோலியர்களும் மற்ற எதிரிகளும் சீன எல்லைக்குள் குதிரைகளில் நுழைவதைத் தடுப்பதற்காகத்தான். குதிரைகள் மூலம் பெருமளவிலான வீரர்கள் குறுகிய காலத்திலேயே மிக நீண்ட தூரம் பயணித்து மிகக் குறைந்த நேரத்தில் மிகப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதனால்தான் கட்டப்பட்டது. இப்பெருஞ்சுவரின் உட் பகுதியிலிருந்தும் நுழைவாயிலை அணுகுபவர்களையும் கண்காணிக்க முடிந்தது.

சீன அரசின் இப்பட்டு ரகசியத்தைக் கடத்த முயன்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சீன வீரர்கள் விழிப்புணர்வுடன் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரகசியம் காத்தனர்.

இதில் சுவையான விஷயம் என்னவென்றால் சீனாவில் பட்டுத் தொழில்நுட்ப முறை மட்டுமே ரகசியம் காக்கப்பட்டது. ஆனால் அப்பொருள் வெளிநாட்டவர்கள் அனைவராலும் அறியப்பட்டது. இவை அனைத்தும் கருணை அற்ற காவலர்கள், கடுமையான சட்டம், சீனத்துப் பெருஞ்சுவர் இவையே சாத்தியம் ஆக்கின. 

சீனாவில் பட்டு ரகசியம் கடத்தப்பட்டது குறித்துப் பல்வேறு கதைகள் உலவுகின்றன. அதில் ஒன்று கோடான் அரசரை மணந்த சீன இளவரசி சீனாவினை விட்டு வெளியேறும் பொழுது பட்டுப்புழுவின் முட்டைகளையும், மல்பெரி விதைகளையும் கேசத்திலும், தலையில் அணியும் துணியிலும் மறைத்து வைத்து கடத்தினாள் என்கிறது. இது மிகப்பெரிய விஷயமே அல்ல. சீனாவில் எல்லை அருகில் இன்று நம்மால் அறியப்படும் துருக்மேனியாவில் பட்டுப்புழு வளர்க்கப்பட்டது.

இன்றளவும் உலகில் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சீனாதான். இந்தியாவுக்கு இரண்டாமிடம். கி.பி.10-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். 

16-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தான் நவீனபட்டு உற்பத்தி மையங்களை அமைத்தார். ஆகையால் இன்றளவும் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. 

சீனர்கள் பட்டின் பயன்பாட்டைக் கண்டறிந்த "லைசு' என்ற இளவரசியைப் பட்டின் கடவுளாக இன்றைக்கும் வழிபடுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com