பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறையாகும்.
இறந்த செல்களை நீக்க ரசாயனக் கலப்புகளை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வரவைத்து விடும்.
க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு இரண்டு சொட்டுகள், கிளிசரின் 10 சொட்டுகள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ளவேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும். இதுவே எளிமையான க்ளென்சிங் முறையாகும்.
ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளிப் பழம், அன்னாசிப் பழம், ஸ்ட்ராபெரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய்ப் பசைக்காரர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விடவேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.
மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெர்ரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கிரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும்.