Enable Javscript for better performance
கதை சொல்லும் குறள் - 41: படிப்பேன்... வெல்வேன்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கதை சொல்லும் குறள் - 41: படிப்பேன்... வெல்வேன்!

    By சாந்தகுமாரி சிவகடாட்சம்  |   Published On : 17th August 2021 12:00 AM  |   Last Updated : 17th August 2021 12:00 AM  |  அ+அ அ-  |  

    mn21

     

    உச்சிவேளை, சூரியன் உச்சியில் இருந்தான். சித்திரை மாதத்தின் பின்பகுதி என்பதால் சூரியனின் கதிர்கள் நெருப்பைப்போல உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.

    விரைந்து சென்றுக் கொண்டிருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில், மூக்காயி முந்தானையால் முகத்தை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, காலைப் பலகாரம் மற்றும் மதிய உணவிற்கான சமையலை முடித்து, குளித்து முழுகி, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, அவளுடைய கணவன் பொன்னன் தன் கைகளாலேயே நெசவு செய்து கொடுத்த, மதுரை சுங்கடிச் சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆழ்ந்த சிகப்பு பார்டர், உடல் முழுக்க சிகப்பு புட்டாக்கள் என்று அவளுடைய மாநிற மேனிக்கு அழகு ஊட்டியது.
    அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதினால், மூக்காயியின் இரண்டு பெண்களும் இன்னும் உறக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை. கடிகாரம் மணி ஏழு என்று காட்டிக் கொண்டிருந்தது.
    புழக்கடையில், பல்லைத் தேய்த்து முகம் கழுவி வந்த பொன்னன்,
    ""என்ன மூக்காயி கிளம்பிட்டியா?'' என்றான்.
    ""புறப்படாம, இப்பவே மணி ஏழு ஆயிடுச்சு, இதோ இந்த மதுரை பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, பஸ்ûஸப் பிடிச்சி அருப்புக்கோட்டையைப் போய்ச் சேர்வதற்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும். அப்புறம் மேகநாத ஐயா வீட்டுக்குப் போய் சேலைகளைக் கொடுக்கணும். புள்ளைங்க கேட்ட "சீவலை' வாங்கியாறனும்; திரும்பவும் பஸ்ûஸப் புடிச்சி மதுரைக்கு வரணும். சாப்பாட்டுக்கு நான் மதுரைக்கு வந்து சேரணும் என்றால் இப்ப புறப்பட்டாதானே முடியும்''.

    ""எழுதப் படிக்கத் தெரியாதப்பொழுதே இப்படி பேசறியே, இன்னும் என்னைப்போல எட்டாங்கிளாஸ் பாஸ் பண்ணி இருந்தால் உன்னைக் கையிலேயே புடிக்க முடியாது''.

    ""இப்படியே நீங்க என்னக் கேலி பண்ணிப் பண்ணி, புள்ளைங்கக் கூட என்ன மதிக்க மாட்டேங்குதுங்க. பெரியவ ராணி மூனாம் கிளாஸ்தான் படிக்கிறா, நான் ஏதாவது கேட்டா, உனக்கு அ, ஆ, இ கூடத் தெரியாதுன்னு சொல்லறா''.

    ""சரி விடு, இப்பப் படிச்சி நீ என்ன டாக்டராக இல்லை, கலெக்டராக ஆகப்போறியா?'' என்று பொன்னன் கேலி செய்ய,

    ""போங்க மச்சான், என் அப்பனைத்தான் சொல்லணும், அஞ்சும் பொண்ணாப் பெத்தாரு, கடைசியிலே என் தம்பிகள் இரண்டு பேர் பொறந்தாங்க, ஆம்பளைப் புள்ளைங்கன்னு அவங்களைக் கொண்டாடிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாரு. நாங்க பொட்டப் புள்ளைங்களாம், எங்களுக்குன்னு படிப்புச் செலவைச் செய்தா அது தண்டமாம்; கட்டிக்கிட்டுப் போய் வீட்டிலே வேலை பார்க்கிற ஜென்மங்களுக்கு எதுக்கு படிப்புன்னு சுள்ளிப் பொறுக்கவும், கழனியிலே வேலை செய்யவுமே அனுப்பினாரு''.

    ""சரி, என் புராணத்த விடுங்க, நான் கிளம்பறேன். சாப்பாட்டுக்கு வந்துடுவேன். சின்னவ இளவரசி பசி தாங்க மாட்டா. வேளைக்குச் சாப்பிடக் கொடுத்துடுங்க'' என்று சொல்லிவிட்டு, ஐம்பது புடவைகள் அடங்கிய மூட்டையை எடுத்துத் தலையில் வெச்சிக்கிட்டுத் தெருவிலே இறங்கி நடக்கத் தொடங்கினாள் மூக்காயி.

    மதுரை பஸ் ஸ்டாண்டிலே கூட்டம் பிதுங்கி வழிந்தது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததே இதற்குக் காரணம். மூக்காயினால் ஒன்பது மணி பஸ்ûஸத்தான் பிடிக்க முடிந்தது. எப்படியும் பன்னிரெண்டு மணிக்குள்ளே வேலையை முடித்தால் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடலாம்.

    ஆனால் அவள் கணவருக்கும், பெண்களுக்கும் பிடித்த "சீவலை' வாங்காமல் வீட்டுப்படி ஏறமுடியாது. அருப்புக்கோட்டையின் மிகவும் பிரசித்திப் பெற்ற பலகாரம் சீவல். கடலை மாவிலே, அரிசி மாவை அளவிற்கு ஏற்றாற்போலக் கலந்து, சிறிது பெருங்காயம், உப்பு, மிளகாய்ப் பொடி, சிலர் ஓமப் பொடியையும் கலப்பது உண்டு; தண்ணீர் ஊற்றி கோதுமை மாவு போலப் பிசைந்து, உருட்டி பிறகு சீவல் கட்டையிலே கொதிக்கும் எண்ணெயில் அந்த மாவைச் சீவிப் போட்டால் சீவல் ரெடி. இந்தச் சீவல் சுவைக்கு அருப்புக்கோட்டை மக்கள் மட்டும் அல்ல விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே அடிமை.

    அதிகாலையில் எழுந்த சோர்வு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில், சூடானக் காற்று முகத்தைப் பதம் பார்ப்பதையும் மறந்து மூக்காயி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.

    மூக்காயி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு பஸ் ஸ்டாண்டில் பேருந்து நின்றிருக்க பெருவாரியான ஜனங்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். 
    ""அருப்புக்கோட்டை வந்துவிட்டது'' என்று மூக்காயி காலுக்கடியில் இருந்த துணி மூட்டையைப் பரபரப்பாக இழுத்து, தன் ஸீட்டை விட்டு வெளியே வந்து மூட்டையைத் தலையின் மீது வைத்துக் கொண்டு, கடைசி ஆளாக இறங்க, கண்டக்டர் விசிலை ஊதப் பேருந்து புறப்பட்டு விட்டது.
    சுற்றிலும் பார்த்த மூக்காயிக்கு திக்கென்றது. தான் எப்பொழுதும் இறங்கும் ஸ்டாப் இதுவல்ல என்று உரைத்தது. 
    ""இது எந்த ஊர் என்று அருகில் போய்க் கொண்டிருந்தவரை வினவினாள்''.
    ""இது பாலியாம்பட்டி''” என்றார்.
    ""பாலியாம்பட்டியா, அப்ப இது அருப்புக்கோட்டை இல்லையா'' என்றாள் மூக்காயி.
    ""ஏம்மா சரியா பார்த்துட்டு இறங்கக் கூடாது. அதான் இறங்குகிற இடத்திலே பாலியாம்பட்டின்னு பெருசாப் போட்டிருக்கே'' என்றார் அந்தப் பெரியவர்.
    ""இப்ப நான் என்ன செய்வேன்? எனக்குப் படிக்கத் தெரியாது ஐயா'' என்று உண்மையைப் போட்டு உடைத்தாள் மூக்காயி.
    ""ஏம்மா, இப்படிச் சொல்ல வெட்கமா இல்லை? சிறு வயசா இருக்கே, சின்ன வயசிலே படிக்கலன்னா என்ன? இப்பப் படிக்கறது. இந்த இருபதாம் நூற்றாண்டிலே படிப்பு அறிவு இல்லாமல் இருக்கறது எவ்வளவு பெரியக் கொடுமை தெரியுமா?''
    ""எங்கே இருக்கே?''
    ""மதுரையிலே ஐயா''
    தன்னுடைய தோல் பையைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி மூக்காயியின் கையில் திணித்தார் அந்தப் பெரியவர்.

    ""அம்மா, என்னுடைய அக்கா சிவகாமி மதுரையிலே ஒரு பள்ளிக்கூடத்திலே ஆசிரியையாகப் பணி செய்து ஓய்வு பெற்றவள். நல்ல வசதியாக இருக்கா. ஓய்வுக் காலத்தை வீணாக்காமல் படிக்காத உன்னைப் போல நடுவயதினருக்கும், வயதானவர்களுக்கும் கிளாஸ் எடுத்து படிப்பு சொல்லிக் கொடுக்கறா. நீ அங்குப் போய் அவளைப் பாரு, அவள் தம்பி சம்பந்தம் சொன்னான்னு சொல்லு, "படி', எழுதப் படிக்கவாவது கத்துக்க, இல்லைன்னா இந்தச் சமுதாயம் உன்னை மதிக்காது, ஏன் உன் புள்ளைகளே உன்னை ஏளனமாகப் பார்க்கும். படிக்காதவங்க இந்த உலகத்திலே நடைப்பிணங்களாகத்தான் உலா வருவாங்க'' என்றார்.

    ""ஐயா நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு உண்மை. பேருந்தின் எண்களைக் கூடப் படித்து அறிய முடியாது. இப்பக்கூட இது எந்த பஸ் என்று கேட்டுத்தான் ஏறினேன். கண்டக்டர் கொடுக்கற சில்லறை சரியாக இருக்கான்னு பார்க்கத் தெரியாது, கொடுத்ததை வாங்கிக் கைப்பையிலே போட்டுக்குவேன். என் பெரிய பொண்ணு, எட்டு வயசுதான், அவகூட என்னைக் கேலி செய்யறா, நீங்க சொன்னது சரிதான், நான் நடைப்பிணம்தான், இந்தப் பிணம் இனி உயிர் உள்ள மனுஷியா, தலைநிமிர்ந்து நடக்கும், நாலு பேர் மெச்ச வாழும். எந்த ஜென்மத்திலியோ செய்த புண்ணியம் உங்களை இங்கே பார்த்தேன், உங்க அக்கா சிவகாமியின் பள்ளியிலே போய்ச் சேருவேன், படிப்பேன், என் கையாலேயே உங்களுக்குக் கடுதாசிப் போடுவேன். அதுல என்ன செய்தி இருக்கும் தெரியுமா?''

    ""சொல்லும்மா, கேக்கவே பெருமகிழ்ச்சியா இருக்கும்மா''

    ""“சம்பந்தம் ஐயா,  நன்றி. என் வீட்டுக்குச் சாப்பிட வாங்க''” என்று இருக்கும்.

    சம்பந்தம் ஐயா காட்டிய திசையிலே தலையில் துணி மூட்டையை வைத்துக் கொண்டு மூக்காயி நடக்கிறாள். அருப்புக் கோட்டைக்கும், பாலியாம்பட்டிக்கும் இடையே தூரம் வெறும் நான்கு கிலோ மீட்டர்கள்தான், இள வயசுக்காரியான மூக்காயிக்கு அதை நடந்து கடக்கச் சிரமம் ஒன்றும் இல்லை. அதேபோல படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் போதும், வயசு ஒரு பொருட்டு அல்ல, மூக்காயி படிப்பாளியாக மாறிவிடுவாள்.

    மூக்காயி நடந்து செல்லும் பொழுது விளைச்சல் தராத களர் நிலங்களைப் பார்த்தாள், நான் இப்பொழுது உங்களைப் போல இருக்கிறேன், அவள் கண்கள் பயிர் விளைந்த நிலங்களையும் பார்த்தது. எதிர்காலத்தில் நான் உங்களைப் போலப் பலன் கொடுப்பேன், படிப்பேன் என்று அவள் வாய் முணுமுணுத்தது.

    உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.

    (குறள் எண்: 406)

    பொருள் : கல்லாதவர்களை விளைச்சல் தராத களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்
    படுவார்கள்.

    (தொடரும்)


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp