விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்களில் தற்போது ஹிட் அடித்திருக்கும் தொடர் "நாம் இருவர் நமக்கு இருவர் 2'. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. அவரது தனது சின்னத்திரை என்ட்ரி குறித்து பகிர்ந்து கொள்கிறார்:
""நான் பக்கா தமிழ்ப் பெண். பிறந்தது மதுரை, வளர்ந்தது, படித்தது கோயம்புத்தூர் பகுதிகளில் தான். ஏரோநாட்டிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ளேன். கல்லூரி படிப்பு முடிந்ததும். யு.பி.எஸ்.சி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான், "சில்லாக்கி டும்மா' என்ற யூடியூப் சேனலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான யூடியூப் விடியோக்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளேன். அதில் "மிஸ்டர் அண்ட் மிஸஸ் காதல்' என்ற குறும்படம் என்னை சமூகவலைதளத்தில் பிரபலமாக்கியது.
இதன்மூலம்தான் ஜீ தமிழில் "மலர்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையில் அறிமுகமானேன். அதன்பின்னர், விஜய் தொலைக்காட்சியின் "பொண்ணுக்கு தங்க மனசு', சன் தொலைக்காட்சியில் "அழகு', போன்ற தொடர்களில் நடித்தேன். இந்தத் தொடர்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான், திடீரென கரோனா பொதுமுடக்கம் ஏற்பட்டு தொடர்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், அதன்பிறகு எந்தத் தொடரிலும் நடிக்காமல் இருந்தேன்.
தற்போது மீண்டும் விஜய் டிவியின் "நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரில் மாயனின் தங்கை ஜஸ்வர்யாவாக நடித்து வருகிறேன்.
நான் இதுவரை நடித்த அனைத்திலும் சொல்லி வைத்தது போன்று எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே தங்கை கதாபாத்திரம்தான். அது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை. தங்கை கதாபாத்திரம் என்றாலே வைஷ்ணவிதான் என்றளவுக்கு தங்கை கதாபாத்திரங்கள் நடித்துவிட்டேன்.
தற்போது பெரியதிரையில் காலடி எடுத்து வைத்துள்ளேன். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள "சபாபதி' படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்துள்ளேன்'' என்று கூறும் வைஷ்ணவி,
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். அவ்வப்போது, தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவது, அதுபோன்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சக நடிகர்களுடன் இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதும் இவரது பொழுதுபோக்குகள்''.