சட்டத்துறை முதல் சைக்கிள் பயணம் வரை!
By - ரிஷி | Published On : 01st September 2021 06:00 AM | Last Updated : 01st September 2021 06:00 AM | அ+அ அ- |

இன்றைய பரபரப்பான உலகில் போக்குவரத்து நெரிசல் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிந்தித்தபோது பிறந்ததுதான் "பிங்க் பெடல்ஸ்' யோசனை. 2017-ம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். "பிங்க் சிட்டி' என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர் என்னுடைய ஊர் என்பதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்தேன் என்கிறார் வழக்குரைஞரான பூஜா. அவர் மேலும் கூறியதாவது:
""காற்று மாசுபாட்டை குறைக்க உதவும் வகையில் பலரை சைக்கிள் ஓட்ட ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்பினேன் அதற்காக தொடங்கியதுதான் இந்த சைக்கிள் நிறுவனம். ஆரம்பத்தில் 10 சைக்கிள்களை வாங்கி வாடகை முறையில் தேவைப்படுவோருக்குக் கொடுத்து வந்தேன். சிறியளவில் தொடங்கப்பட்டாலும் மெல்ல விரிவடைந்தது. விரைவில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
பின்னர், கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களுக்கு வாடகை முறையில் சைக்கிளைக் கொடுக்கத் தொடங்கினேன்.
பலர் சைக்கிள் ஓட்ட முன்வரவேண்டும். இதுவே எங்கள் நோக்கம். இதற்காக நாங்கள் சைக்கிள் டூர் ஏற்பாடு செய்கிறோம். பயணிகள் சைக்கிளில் செல்ல நினைக்கும் தூரத்தைப் பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். கிலோமீட்டர் அதிகரிக்கும்போது கட்டணம் குறையும்.
ஆரம்பத்தில் அதிக தூரம் ஓட்ட முடியுமா என்கிற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனால் ஒருமுறை ஓட்டிப் பார்த்ததும் தொடர்ந்து வருகிறார்கள்.
அதுபோன்று ஜெய்ப்பூர் சுற்றுலாத் தளம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமிருக்கும். இவர்களில் பலர் தற்போது சைக்கிளில் நகரைச் சுற்றி வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்கிறார் பூஜா.