காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.
கீரை வாங்கும்போது மஞ்சள் நிற இலைகள் அதிகம் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள், பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக் கூடாது.
தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவல்லி சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து, மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியோடு இருக்கும்.
பாகற்காய் குழம்பு செய்யும்போது, சில துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சுவையான பச்சடி தயார்.
சூப்புகள் செய்யும்போது, சோளமாவு அல்லது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து, சலித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
பச்சை கொத்தமல்லித் தழையை துவையலுக்கு அரைக்கும்போது, புளிபோடுவதற்குப் பதில் ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.
கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் சில மோர் மிளகாய் வற்றலை வறுத்துப் போட்டு கடைந்தால் ருசியாக இருக்கும்.
கீரை சமைக்கும்போது, ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பை கலந்தால், கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் இருக்கும்.
வாழைக்காயை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, இரண்டாக நறுக்கி வைத்தால் கருப்பாகாமல் இருக்கும்.