சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்..!

கடல் மட்டத்திலிருந்து 8,849  மீட்டர்  உயரத்தில் உள்ள  உலகின் மிக உயரமான எவரெஸ்ட்  சிகரத்தில் கால் பதித்து  சாதனை படைத்த  முதல் தமிழ்ப் பெண்  என்ற பெருமையை  முத்தமிழ்ச்செல்வி பெற்றிருக்கிறார்.
சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்..!
Updated on
1 min read

கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து சாதனை படைத்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றிருக்கிறார். இவரது விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமம் என்றாலும், பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் கடலூரில்தான். முப்பத்து நான்கு வயதாகிறது.

இளம் வயதில் திருமணமாகி சென்னைக்கு இடம் பெயர்ந்தார். கணவருக்கு கணினித் துறையில் வேலை. கணவர் தந்த உற்சாகத்தில் கணினித் துறையில் பட்டம் பெற்றார். பத்தாம், ஆறாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மகள்களுக்குத் தாய். ஜப்பான் மொழியைப் படித்து முடித்து மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து வரும் முத்தமிழ்ச்செல்வி, 2023-ஆம் ஆண்டு மே 23-இல் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனையைப் படைத்தார். அவருடன் ஓர் சந்திப்பு:

சாதனை குறித்து...?

கல்யாணமாகி இரண்டு மகள்கள் இருக்கும்போது மலையேற்றப் பயிற்சி தேவையா? என்று பலரும் பேசினார்கள். எனது கணவர், மகள்கள் தந்த ஆதரவால் எனது கனவு நிறைவேறியுள்ளது.

இந்தச் சாதனை சென்ற ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். தேவையான பணத்தைப் புரட்ட முடியாததால் காலதாமதம் ஆனது.

இந்த ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் என்னுடன் மலை ஏறிய இரண்டு பேர் மரணம் அடைந்தனர். பலருக்கு அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்தக் கனத்த சூழ்நிலையில், என்ன நடந்தாலும் சரி என்று முடிவெடுத்து மலை ஏறினேன். அங்கு கால் பதித்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையையும் பெற்றேன். அடிவாரத்திலிருந்து எவரெஸ்ட் சிகரம் தொட்டு மீண்டும் அடிவாரம் வந்தடைய 56 நாள்கள் ஆனது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 155 அடி உயரமான மலைப்பட்டு குன்றிலிருந்து கண்களை துணியால் கட்டிக் கொண்டு கயிறு உதவியுடன் தரையை நோக்கி பாறைகளில் கீழ் நோக்கி குதித்து 58 விநாடிகளில் தரையில் இறங்கியது, குலுமணாலியில் 165 அடி உயரமுள்ள மலை சரிவுகளில் முதுகில் இரண்டாவது மகளைக் கயிறால் கட்டிக் கொண்டு கண்களையம் துணியால் கட்டிக் கொண்டு இறங்கியது போன்றவற்றையும் மேற்கொண்டேன். இந்தப் பயிற்சிகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் வரை செலவாகியுள்ளது.

லட்சியத்தை நிறைவேற்ற 'ஏசியன் டிரெக்கிங்' என்ற தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டேன். லடாக்கில் இருக்கும் 6,496 மீ. உயரமான காங் யெட்சே பீக் -2 மலையில் ஏறி இறங்கி, அதற்கான தகுதியைப் பெற்றேன். மலை ஏறும் செலவுகளுக்காக ரூ. 45 லட்சம் தேவைப்பட்டது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டு ரூ.20 லட்சம் சேகரித்தேன். மீதி ரூ. 25 லட்சத்துக்கு தமிழ்நாடு அரசின் உதவியை நாடினேன். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் கிடைத்தது.

ஏப்ரல் 5-இல் 400 பேர் அடங்கிய சிகரம் ஏறிய குழுவில் நானும் ஒருத்தியானேன். சிகரம் தொட்டு திரும்பினேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com