

உடலில் சூடு அதிகரிப்பதால்தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப் பையைப் பாதிக்கும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம். கீழ்க்காணும் எட்டு உணவுகளை சாப்பிட்டால், மாதவிடாய் நாள்களில் மனமும், உடலும் நலம் பெற்று இருக்கலாம்.
நீர்ச்சத்து உணவுகள்: நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் உண்ண வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ சாப்பிடலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.
துவர்ப்பு உணவுகள்: மாங்கொட்டையைஅவித்ததோ அல்லது பச்சையாகவோ, மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம், உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.
பிஞ்சு காய்கறிகள்: பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச் சிக்கல் ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச் சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும்.
முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச் சத்துள்ள பயிர் வகைகள், பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.
செக்கு நல்லெண்ணெய்: செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால், உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
மோர்: மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துகொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.
புட்டரிசி: அதிக ரத்தப்போக்கு, வலியைத் தடுக்க, புட்டரிசி என்று கூறப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்க்கலாம்.
உளுந்தங்கஞ்சி: உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.