

உங்கள் பொழுதுபோக்கு என்ன?'' என்று யாராவது உங்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்களா? நிச்சயம் கேட்டிருப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மற்றும் உங்களுக்கு அறிமுகமானவர்கள் என யாராவது இப்படி உங்களைக் கேட்டிருப்பார்கள். அப்போது நீங்கள் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்? ஒரு நொடி யோசித்துப் பாருங்களேன். என்ன, ஏதாவது நினைவுக்கு வருகிறதா?
""பொழுதுபோக்கு என்று ஒன்று இருக்கிறதா?'' என உங்களில் சிலர் குழம்பியிருக்கக்கூடும். சிலரோ தயக்கத்துடன், ""தொலைக்காட்சி பார்ப்பது''என்று சொல்லியிருக்கக்கூடும். சிலர், ""புத்தகம் படித்தல், சுற்றுலா செல்லுதல், வானொலி கேட்டல், அஞ்சல் தலை சேகரித்தல்...'' என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி, கேள்வி கேட்டவர்களை பூரிப்புடன் பார்த்திருக்கலாம்.
உண்மைதான். பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கின்றன. நூல்களைப் படித்தல், இயற்கைக் காட்சிகளை ரசித்தல், பறவைகளைக் கவனித்தல், ஓவியம் வரைதல், இசை கற்றல், நடனம் கற்றல், சிற்பம் செதுக்குதல், தோட்டம் போடுதல், புகைப்படங்கள் சேகரித்தல், அஞ்சல் தலைகளைச் சேகரித்தல், வாழ்த்து அட்டைகளைச் சேகரித்தல், தீப்பெட்டிப் படங்களைச் சேகரித்தல், விளையாடுதல் என்று நூற்றுக் கணக்கான பொழுதுபோக்குகள் இருக்கின்றன.
பெரியவர்களைவிட, சிறியவர்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைக்கிறது. அந்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு இவ்வகையான பொழுதுபோக்குகள் உதவுகின்றன. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிடவும் பொழுதைப் பயன்படுத்துவது என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும். நண்பர்களோடு தேவையில்லாமல் ஊர் சுற்றுவது, வெட்டியாகப் பேசி நேரத்தை வீணாக்குவது, தொலைக்காட்சிக்கும் வீடியோ விளையாட்டுக்கும் அடிமையாவது, எப்போது பார்த்தாலும் கைப்பேசியில் பேசி காலத்தை விரயமாக்குவது போன்ற பழக்கங்கள் குழந்தைகளையும் இளைஞர்களையும் கெடுக்கின்றன. இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாமல் இருக்கவேண்டும் என்றால், சிறு வயதிலேயே உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது.
பொழுதுபோக்கினால் என்ன நன்மை விளையும் என்று நீங்கள் கேட்கக்கூடும். பொழுதுபோக்குகள் உங்கள் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக மாற்றிவிடும் தன்மை படைத்தவை. நீங்கள் அலட்சியமாகக் கடைபிடிக்கத் தொடங்கும் சில பொழுதுபோக்குகளே பிற்காலத்தில் உங்கள் தொழிலாகவும், உங்கள் அடையாளமாகவும் மாறிவிடலாம். உங்களை புகழ்பெற்றவராக மாற்றிவிடலாம். இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இன்று பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களாய் புகழ் பெற்றிருக்கின்ற யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சிறு வயதிலேயே தமது துறை மீது ஆர்வத்துடன் இருந்திருப்பது தெரிய வரும். அது மட்டும் அல்ல, பொழுதுபோக்குகள் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றும். பொறுமையையும் உடல் உழைப்பையும் கற்றுத் தரும். புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி அறிவைப் பெருக்கும். நேரத்தின் அருமையை உணர்த்தும்.
இசை, நாட்டியம், ஓவியம் வரைதல், நாடகம்போன்றவற்றை பொழுதுபோக்காகக் கொண்டால் எதிர்காலத்தில் நீங்கள் கலைஞர்களாகலாம். நாணயங்களையும், அஞ்சல் தலைகளையும் சேகரித்தால் வரலாற்று அறிஞராகவோ, ஆய்வாளர்களாகவோ ஆகலாம். புகைப்படங்களையோ, தீப்பெட்டிப் படங்களையோ, வாழ்த்து அட்டைகளையோ சேகரித்தால் புகைப்படக் கலைஞராகவோ, வடிவமைப்பாளராகவோ மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் புத்தகம் படிப்பவரா? வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கவனிப்பவரா? அப்படியென்றால் எதிர்காலத்தில் நீங்கள் எழுத்தாளராகவோ பத்திரிகையாளராகவோ ஆகலாம். நீங்கள் பறவைகளின் இறகுகளைச் சேகரிப்பவரா? பறவைகளை உற்று நோக்கி அறிவதில் ஆர்வமுடையவரா? அப்படியென்றால், நீங்கள் எதிர்காலத்தில் பறவையியலாளர் சலீம் அலியைப்போன்று வருவீர்கள். நான் ஏதோ சோதிடம் சொல்வதாக நினைக்க வேண்டாம். இப்படித்தான் நடக்கும் என்று மிக உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இப்படி நடப்பதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், பயிற்சியும் விருப்பமும்தான் ஒருவரை ஒரு துறையில் ஈடுபட வைக்கிறது. அவர் அத்துறையில் சிறப்பிடம் வகிக்க அடித்தளமாக அமைகிறது.
பொழுதுபோக்குகள் - உங்களின் வாழ்க்கை முறை, நீங்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் வசதிகள், உங்கள் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன.
நீங்கள் காட்டுப் பகுதியில் வாழ்பவராக இருந்தால் பல வகையான இலைகளையும், விதைகளையும், பறவைகளின் இறகுகளையும் சேகரிக்கும் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ளலாம். ஒரு மயில் இறகையோ, அல்லது ஒரு மைனாவின் இறகையோ வருடிப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் மென்மைக்கு இணையாக இவ்வுலகில் எந்தப் பொருளையுமே சொல்லமுடியாது. இறகுகளின் நிறங்களும், வடிவங்களும், அமைப்பும் நம்மைக் கவர்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை பறவைகளின் வாழ்க்கையையும் சுற்றுச் சூழலையும் நமக்குச் சொல்லித் தருகின்றன. நீங்கள் மலைப் பகுதியில் வாழ்பவராக இருந்தால் பல வகையான கற்களைச் சேகரிக்கலாம். கற்களில் இருக்கின்ற வேதிப் பொருட்களுக்கு ஏற்ப அவற்றின் நிறங்களும் வரி வடிவங்களும் மாறுபடுகின்றன.
ஆற்றங்கரையில் வாழ்பவர்களுக்கும்கூட பல வகையான கூழாங்கற்களும், கற்களும் கிடைக்கும். இவற்றை சேகரிப்பதன் மூலம் புவியைப் பற்றியும், பல வகையான பாறைகளைப் பற்றியும் மண் வகைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவு வளரும். நகரத்திலோ நகரை ஒட்டிய பகுதிகளிலோ வாழ்பவர்களுக்கு அஞ்சல் தலை, வாழ்த்து அட்டை, தீப்பெட்டிப் படங்கள்போன்றவற்றை சேகரிப்பது எளிது. பழைய நாணயங்களைக்கூட சேகரிக்கலாம். பழைய பொருட்கள் விற்கிற கடைகளில் பழங்கால நாணயங்கள் நிறையக் கிடைக்கும். நகரத்தில் வாழ்பவர்களுக்கு பிரபலமானவர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதும் எளிமையானதுதான். பிரபலமானவர்களின் நிகழ்ச்சிகளை நாளேடுகளைப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அங்கு சென்று நேரில் சந்தித்து கையெழுத்து பெறலாம்.
பணக்காரர்கள் விலையுயர்ந்த பொருட்களைச் சேர்ப்பார்கள். நடுத்தர வர்க்க மக்களும், ஏழைகளும் தமது வருவாய்க்கு ஏற்ப வாழப் பழகுவார்கள். அதுபோலத்தான் உங்கள் சூழல், கிடைக்கும் நேரம், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து நீங்கள் ஏதாவது ஒரு பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தினசரி வாழ்வில் ஒரு மாற்றம் தெரியத் தொடங்குவதை உணர்வீர்கள். வாழ்வின் அழகுகள் தெரிய வரும். நம் வாழ்க்கையின் பொருள் புரியும்.
குழந்தைகளே, நீங்கள் உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முன் ஒரு சிறிய வேலை. பொழுதுபோக்குகளுக்கு ஆங்கிலத்தில் தனித்தனி பெயர்கள் உண்டு. டஏஐகஅபஉகவ என்றால் அஞ்சல் தலை சேகரிப்பு. நஇதஐடஞடஏஐகவ என்றால் பழைய பத்திரங்கள் மற்றும் நிதி ஆவணங்களைச் சேகரித்தல். சமஙஐநஙஅபஐஇந என்றால் நாணயங்கள் சேகரிப்பதும் அதைப் பற்றிப் படிப்பதும். இப்படி ஏதாவது பத்து பொழுதுபோக்குகளுக்கான ஆங்கிலப் பெயர்களை, ஆங்கில அகராதியின் துணை கொண்டு கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.