சென்னைக்கு வருபவர்கள் பலரும், "சென்னையில் வெயில் மிகவும் அதிகம்!'' என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையில் தமிழகத்தின் வேறு சில ஊர்களிலும் வெயில் மிகவும் அதிகம்தான். குறிப்பாக சென்னையில் எல்லோருக்கும் அதிகமாக வியர்க்கிறது. இதற்குக் காரணம் என்ன?
காற்றில் கலந்துள்ள நீர் - நீராவியின் அளவே ஈரப்பதம் எனப்படுகிறது. காற்றில் அதிக அளவு ஈரப்பசை இருப்பதைத்தான் ஈரப்பதம் என்று குறிக்கிறோம். ஓர் இடத்திலுள்ள வெப்ப நிலையைப் பொருத்தே ஈரப்பதம் அமைகிறது. கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்போது, ஈரப்பதமும் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம், கடலில் உள்ள நீர் அதிகமாக ஆவியாவதுதான். ஆகவே அங்கிருந்து வீசும் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கிறது.
அதே சமயம், கடற்கரையை விட்டுத் தள்ளியுள்ள பகுதிகளிலிலும், பாலைவனங்களிலும் காற்று மிகவும் வறண்டு இருக்கும். காற்று பயணித்துக்கொண்டே இருப்பதால், தொலைவைக் கடக்கக் கடக்க அதிலுள்ள ஈரப்பதம் குறைகிறது. அதே நேரம், மழைக் காலம், உறைபனி விழும் நேரம், மூடுபனி நேரங்களில் காற்றில் நீர் அதிகம் கலந்திருக்கிறது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப் பொருத்து நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உண்டு. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் நமது தோல் பிசு பிசுப்பாக வியர்வை மிகுந்ததாக ஆகிவிடுகிறது. இதற்குக் காரணம், நமது தோல் பகுதியிலிருந்து வெளியேறும் வியர்வை எளிதில் ஆவியாகாமல் போவதுதான். சுற்றுப் புறத்தில் உள்ள வெப்ப நிலை வியர்வையைக் கிரகிப்பதைவிட, அதில் ஈரப்பதத்தின் அளவு மிகுந்திருப்பதால்தான் இப்படி நிகழ்கிறது. அதே நேரம் குறைவான ஈரப்பதமும் நமது உடலைப் பாதிக்கக்கூடும். உதடு வெடித்தல், தோல் பகுதி எண்ணெய்ப் பசையற்று வறண்டுபோதல் போன்றவை ஈரப்பதம் குறைவதால் ஏற்படும் விளைவுகள்.
சென்னை ஒரு கடற்கரை நகரம். ஈரப்பதமும் அதிகம். கடற்கரையிலிருந்து ஈரக் காற்று அதிகம் வீசுவதால் வெயில் அடிக்கும்போது அதிகம் வியர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.