
சிகப்பு இந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள்தான் அமெரிக்க நாட்டின் பூர்வீகக் குடிகள். இவர்கள் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன் வட ஆசியாவிலிருந்து கால்நடையாக கனடா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்கள்.
இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சுமார் ஏழரை கோடி மக்கள் இருந்தனர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். 2000 வகை மொழிகளில் இவர்கள் பேசினார்கள் என்றும் ஆதாரங்கள் உள்ளன.
இவர்களிடம் கலைகள், அரசியல், சமூகக் கட்டுமானங்கள், கணிதம், தொழில், விவசாயம், எழுதுதல் மற்றும் பலவிதமான மதநம்பிக்கைகள் பரவலாக இருந்தன.
நெருப்பின் பயனை நன்கு உணர்ந்தவர்கள். ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும் குடியிருக்க இடம் உண்டாக்கிக் கொள்ளவும் தெரிந்தவர்கள்.
நம் இந்திய நாட்டைத் தேடி அலைந்த ஐரோப்பியர்கள் வழிதவறி அமெரிக்காவில் வந்திறங்கினார்கள். அமெரிக்காவை இந்தியா எனத் தவறாக நினைத்துக் கொண்ட அவர்கள், அங்கு வசித்து வந்த பூர்வீகக் குடிமக்களை இந்தியர்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் முகத்தில் செந்நிற சாயத்தைப் பூசியிருந்ததால் இவர்களைச் செவ்விந்தியர்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.
ஐரோப்பாவில் இருந்து தங்கம், வெள்ளி செல்வங்களைத் தேடி வந்தவர்கள் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களையும் வேட்டை நாய்களையும் கொண்டு வந்து, எதிர்ப்பு காட்டிய பூர்வீக மக்கள் மீது பிரயோகம் செய்து அழிக்க முற்பட்டனர். மேலும், பெரியம்மை, காலரா போன்ற கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்டுவந்து நோயைப் பரப்பினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பூர்விக செவ்விந்தியர்கள் பலர் மாண்டு போனார்கள்.
இவ்வாறு இறந்துபோன மக்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி என்று கருதப்படுகிறது.
இவ்வாறு அழிந்து போனவர்கள் நீங்கலாக நாளது தேதியில் சுமார் 2,50,000 பூர்வீகக் குடிமக்கள் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பல ஆண்டுகளாக சம உரிமையும் சுதந்திரமும் வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது இவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கென்று தனி உரிமைகள், சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் ஏதும் கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.