

கோடைகாலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்கூட மிகக் கடினமானதாகும். பறவைகளும் விலங்குகளும் கோடையைச் சமாளிக்கும் விதமே அலாதியானது.
சிலவகைப் பூச்சிகள் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் தம் உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கரையான்கள் தமது புற்றுகளில் எண்ணற்ற நுண்துளைகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தம் இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக் கொள்கின்றன.
யானைகள் கூட்டம் கூட்டமாகத் தண்ணீரைத் தேடி அலைவது கோடையில்தான்! சில யானைகள் தரைக்கடியில் நீர் இருப்பதை உணர்ந்தால் தமது துதிக்கையால் நீர் வரும்வரை மண்ணைத் தோண்டிக்கொண்டே இருக்கும்.
மான்கள் பெரும்பாலும் நின்று கொண்டோ, ஓடிக் கொண்டோதான் இருக்கும். ஆனால், அவை தரையில் அமர்ந்துவிட்டால், தம் உடல் வெப்பத்தை நிலத்திற்குக் கடத்துகின்றன என்று அர்த்தம்.
தங்களது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்ள சில விலங்குகள் வியர்வையை வெளிவிடுகின்றன. நாய் தனது நாவின் மூலம் வியர்வை சிந்தும்.
பொந்துகளில் மறைந்து வாழும் சில உயிரினங்கள் அதிக உமிழ் நீரைச் சுரந்து, தம் உடலை நக்கிக் கொள்வதன் மூலம் தமது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்கின்றன.
பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அவற்றின் நீர்ச்சத்து முழுவதும் சுவாசித்தலின்பொழுது ஆவியாகி விடுகின்றது. இதைத் தவிர்க்க அவை கடும் கோடை காலங்களில் தமது தொண்டைப் பகுதியை வேகமாக அசைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் நீர் இழப்பைச் சரி செய்து கொள்கின்றன.
கழுகு, வல்லூறு போன்ற பெரிய பறவைகள் தமது சிறகுகளை அசைக்காமல் மிக உயரமாகப் பறப்பதன் மூலம் தமது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்கின்றன.
பெரும்பாலான பறவைகள் கோடை காலத்தில் நீர் நிலைகளை நாடிச் செல்கின்றன.
விலங்குகளும் நீருக்குள் மூழ்கித் தம் உடலை நனைத்துக் கொள்வதன் மூலம் கோடை வெப்பத்தைச் சமாளிக்கின்றன.
-ந. லெட்சுமி, கடுவெளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.