

பாரி என்னும் ஓர் மன்னன்
பறம்பு மலையை ஆண்டுவந்தான்
வாரி வாரி வழங்கியதால்
வள்ளல் என்று புகழ்பெற்றான்!
இல்லை என்று வந்தவர்க்கு
இல்லை என்று சொல்லாமல்
பல்வகைப் பொருளும் பொற்காசும்
பரிசாய்த் தந்து மகிழ்வித்தான்!
பாரி ஓர்நாள் தேரேறி
பறம்பு மலையின் வளம் காண
ஊரைச் சுற்றி வரும்போது
உற்று நோக்கினான் ஓரிடத்தை!
அழகிய முல்லைக் கொடியொன்று
அசைந்து காற்றில் ஆடியது
எழில்மிகு முல்லைக் கொடியதுவும்
ஏறிச் சுற்றிப் படர்வதற்கு
எந்தத் துணையும் இல்லாமல்
ஏங்கித் தவிப்பதை அவன் கண்டான்!
அந்தக் கொடிக்கு அருகினிலே
அவனது தேரை நிறுத்தி வைத்தான்!
ஆடிய முல்லைக் கொடியதனை
அந்தத் தேர்மேல் படரவிட்டான்!
வாடிய முல்லைக் கொடியதற்கு
வழங்கினான் பாரி தன் தேரை!
நடந்தே திரும்பினான் அரண்மனைக்கு
நாடே அவனைப் போற்றியது!
படரும் முல்லைக் கொடிகூட
பாசம் மிக்க உயிர்தானே!
முல்லையும் வளர்ந்து பூப்பூத்து
முகமும் மலர மகிழ்வோடு
பல்லைக் காட்டிச் சிரித்தபடி
பாரி மன்னனை வாழ்த்தியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.