ஒன்று ஒன்றாய் இருக்கும் தடியை
உடைக்க முடியுமே - அதனை
ஒன்றாய் சேர்த்து கட்டி வைத்தால்
வலிமை நிறையுமே!
காட்டில் ஐந்து பசுக்கள் சேர்ந்து
வாழ்ந்து வந்தது - என்றும்
கனிந்த நட்பால் ஒன்றாய் இருந்து
கலந்து மகிழ்ந்தது!
கிடைக்கும் உணவை பகிர்ந்து கொண்டு
நிறைவு கண்டது - அவைகள்
நடக்கும்போதும் உறங்கும்போதும்
இணைந்து கொண்டது!
இரையைத் தேடி சிங்கம் ஒன்று
அலைந்து திரிந்தது! - இரை
எங்கும் இல்லா நிலையில் சிங்கம்
தவித்துப் போனது!
ஐந்து பசுக்கள் சேர்ந்த கூட்டம்
கண்ணில் பட்டது - இன்று
அடையும் வேட்டை நிறைய என்று
எண்ணிக் கொண்டது!
ஆசை கொண்ட சிங்கம் பசுவைத்
தாக்க நினைத்தது! - முகத்தில்
மீசை துடிக்க பசுவைப் பார்த்து
பாய்ந்து சென்றது!
சிங்க ராஜா அருகில் வந்த
ஓசை கேட்டது! - பசுக்கள்
ஐந்தும் ஒன்றாய் இணைந்து நின்று
திரும்பிப் பார்த்தது!
ஒன்றைத் தாக்க பாய்ந்த போது
நான்கு பசுக்களும் - சிங்கத்தை
ஒன்றாய்ச் சேர்ந்து முட்டித் தள்ளி
தூர எறிந்தது!
பாய்ந்து வந்த சிங்க ராஜா
பயத்தில் நடுங்கியே - உடல்
ஓய்ந்த நிலையில் காட்டின் உள்ளே
ஓடி மறைந்தது!
ஒற்றுமைதான் உலகைக் காக்கும்
என்ற தத்துவம் - இதை
உணர்ந்து மக்கள் வாழ்ந்து விட்டால்
ஓங்கும் நம் பலம்!