புதிதாய்ப் பிறந்த குட்டி மீனு
நீரில் வட்டம் போட்டது!
கதிரின் ஒளியைப் போலவே
கண்கள் பெரிதாய் ஆனது!
நீண்ட தூரம் சென்றதால்
உடலும் சோர்வாய்ப் போனது
வாண்டு அதுவும் வந்த வழி
மறந்துதானே போனது!
அழுது அழுது முகமும் வாடி
வந்த வழியைத் தேடுது!
பொழுது போக பொழுது போக
பயமும் நெஞ்சில் தொற்றுது!
குட்டி மீனைக் காணாததால்
தாயும் தேடிச் சென்றது!
சென்ற வழியில் கண்ட உறவை
கேட்டுக் கேட்டுச் சென்றது!
வெகுதூரம் வந்த பிறகு
குட்டி மீனைக் கண்டது!
அருகில் நெருங்க அருகில் நெருங்க
மனதில் மகிழ்ச்சி கொண்டது!
தாயைக் கண்ட குட்டி மீனு
தாவிப் பாய்ந்து வந்தது
தாயின் பேச்சைக் கேட்காததன்
தவறை உணர்ந்து நின்றது!
தவறை உணர்ந்த குட்டி மீனின்
உடலைத் தடவிக் கொடுத்தது!
பிறகு என்ன?..., உற்சாகமாய்
நீந்தி வீடு சென்றன!