பிரிட்டிஷ் அரசை ஆதரித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு காரில் சத்தியமூர்த்தியுடன் புறப்பட்டார் நேரு! அப்போது புதுக்கோட்டை மன்னராட்சிக்கு உட்பட்டிருந்தது. நேருவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. சமஸ்தான அதிகாரி நேருவிடம், ""உங்கள் கார் உள்ளே நுழைய சமஸ்தானம் தடை விதித்திருக்கிறது!'' என்று கூறி அதற்கான உத்தரவுக் கடிதத்தைக் காட்டினார். சத்திய மூர்த்தி நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்.
உடனே இருவரும் காரில் இருந்து இறங்கி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். அதிகாரி பதறிப்போய் இருவரையும் வழிமறித்தார். அவரிடம் சத்தியமூர்த்தி, ""நேருவின் கார்தானே சமஸ்தானத்திற்குள் நுழையக்கூடாது?....தடை உத்தரவு காருக்குத்தானே தவிர நேருவிற்கு இல்லையே!'' என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின் வாங்கினர். சத்தியமூர்த்தியின் சமயோசிதத்தைப் பாராட்டினார் நேரு! புதுக்கோட்டை மக்களைச் சந்தித்துவிட்டுத்தான் டெல்லி திரும்பினார் நேரு!