
போஜராஜன் என்னும் அரசன் அஷ்டலக்ஷ்மிகளை வழிபட்டு வந்தான். ஒருநாள் பூஜை முடிந்து அவன் புறப்படும்போது பூஜை அறையில் ஒரு அசரீரியின்
(உருவமற்ற) குரல் கேட்டது!
"மன்னவா!....நாளை சூரிய உதயத்துடன் எங்களது பணி முடிந்தது! இதுவரை நீ செய்த பூஜைக்கான பலன்களையும் தந்து அருளினோம்! எனினும் கடைசியாக நாங்கள் விடை பெறுகிறோம். உனக்கு எங்கள் கடைசி அருளாசி வழங்க உள்ளோம்! எங்களில் யாராவது ஒருத்தியை நீ தினமும் பூஜை செய்யலாம். மீதி அனைவரும் இங்கிருந்து புறப்பட்டு விடுவோம்! எங்களில் யார் உனக்கு நிரந்தரமாக வேண்டும்? சொல்வாய்!'' என்றது அசரீரி.
""நான் இன்று இரவு இது பற்றிச் சிந்தித்து நாளை காலை சூரிய உதயத்திற்கு முன் என் வேண்டுகோளை கூறுகிறேன்!'' என்றான் போஜன். இரவு முழுவதும் மன்னனுக்கு உறக்கமில்லை. காலையில் ஸ்நானம் செய்துவிட்டு சூரிய உதயத்திற்கு முன் பூஜை அறைக்கு வந்தான்.
"மன்னவா!.... நாங்கள் புறப்படத் தயாராகி விட்டோம்! உன் விருப்பத்தைக் கூறுக!''
"எதை இழந்தாலும் மனிதன் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது என் கொள்கை. நம்பிக்கையைத் தருபவள் தைரிய லக்ஷ்மி! அந்தத் தாய் மட்டும் என்னோடு இருக்கட்டும்! நான் அந்தத் தாய்க்கு என் இன்றைய பூஜைகளை ஆரம்பிக்கிறேன்! மற்றவர்கள் அவர்கள் விருப்பம் போல் செய்யலாம்'' என்றான் போஜராஜன்.
"இப்படி நீ கேட்பாய் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை! யாரைப் பிரிந்தாலும் தைரிய லக்ஷ்மியைப் பிரியக் கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்ட விதி! இதை எப்படியோ நீ அறிந்து கொண்டாய்! உன்னை மெச்சுகிறோம்! நாங்கள் அனைவரும் இங்கேயே இருந்துவிடத் தீர்மானித்துவிட்டோம்! நீ பூஜையை ஆரம்பிக்கலாம்!'' என்று அசரீரி கூறியவுடன் அங்கு பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே தெய்வீக மணம் கமழ்ந்தது!
போஜனின் சாம்ராஜ்ஜியத்தில் அஷ்டலக்ஷ்மிகளும் அருள் புரிந்து கொண்டிருந்தனர்.
-மயிலை மாதவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.