
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் மூங்கில் மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் பாம்புசியே என்பதாகும். நான் போவேசியா குடும்பத்தைச் சேர்ந்தவன். வறட்சி நிறைந்து, தண்ணீர் பற்றாகுறையாக இருந்தாலும் நன்கு வளருவேன். என்னை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன் என்றும் அழைப்பார்கள். உங்களின் சுற்றுச்சூழலை நல்ல முறையில் பாதுகாப்பேன். நான் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகமாக வளருகிறேன்.
குழந்தைகளே, நான் கிராம மற்றும் நகர்ப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு காற்றில் கார்பன் டை ஆக்ûஸடின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறேன்.
நான் எஃகை விட ஆறு மடங்கு வலிமை வாய்ந்தவன். அதனால், என்னை பயோஸ்டீல் என்றும் அழைக்கிறார்கள். நான் 47 சதவீத கார்பன்டை ஆக்ûஸடை உட்கொண்டு 35 சதவீத ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறேன். நான் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பெருமளவில் பயன்படுகிறேன். எனது மேற்பகுதி சுற்றுப்புற மாசுகளைக் குறைப்பதிலும், வேர்ப்பகுதி மண்அரிப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. நான் குடிசை வீடுகளைக் கட்டுவதிலும், கைவினைப் பொருள்கள் செய்யவும், சிறுதொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களுக்கு மூலதாரமாக இருக்கிறேன்.
எனது வேரிலிருந்து நுனி வரை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது. மூங்கில் அரிசியில் 160 கலோரி இருக்கிறது. என் மரத்தின் வேரை அரைத்து முகத்தில் தடவினால் அம்மைத் தழும்பு நீங்கும், சாம்பலைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் அது வெண்மையாகும். சரும நோய்களுக்கு என் இலைகள் ஒரு அருமருந்து. காயம் ஏற்பட்டு வீக்கமோ அல்லது இரத்தக் கசிவோ ஏற்பட்டால் என் இலை அல்லது தண்டுப் பகுதியை எரித்து சாம்பலைத் தடவினால் உடனடியாக குறைந்து விடும்.
குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி விவசாய நண்பர்கள் அதிகமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதற்காக என்னை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கி தாவரப் பட்டியலில் சேர்த்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருக்கிறாராமே. எனினும், வனப்பகுதிகளில் வளரும் மூங்கில் வனப்பாதுகாப்பு சட்டம் 1980-இன் கீழ் தொடர்ந்து நான் மரங்கள் பட்டியலில் தான் இருக்கிறேன்.
நான் திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர், திருவள்ளூர் மாவட்டம், திருபாச்சூர் அருள்மிகு வாசீஸ்வரர், நாகப்பட்டினம் மாவட்டம், அருள்மிகு கீழப்பெரும்பள்ளம் நாகநாதர், தேனி மாவட்டம், அருள்மிகு மூங்கில்கணை காமாட்சி அம்மன் ஆகிய திருக்கோவில்களில் தல விருட்சமாக இருக்கிறேன். வேதங்களே சுவாமியை வழிபடுவதற்காக மூங்கில் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு.
குழந்தைகளே, நீங்க எப்போதும் பணிவாக இருக்கனும் என்பதைத் தான் வளைந்த மூங்கில் அரசன் முடி மேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தன் கீழ் என்ற பழமொழி சொல்லுது. என்னுடைய நட்சத்திரம் புனர்பூசம். கடலில் கிடைப்பது முத்து, காடுகள் நமது சொத்து. நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்!
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.