உத்தரப் பிரதேச மாநிலத்தில்
உள்ளது கான்பூர் பெருநகரம்! - அங்கே
மகிதலாத் சித்திக் என்னும் ஒருபெண்
மகிழ்வார் நல்ல நூல்களைப் படித்து!
இந்தியில் இருந்த இலக்கியம் கற்றார் - தேர்வை
எழுதிப் பெற்றார் முதுகலைப் பட்டம்!
இதிகாசங்கள் புராணங்கள் மீது
எல்லையில்லா ஆர்வம் கொண்டார்!
இராமனின் கதையை இனிதாய்க் கூறும்
இராமாயணத்தில் இதயம் நெகிழ்ந்தார்!
அண்ணன் தம்பியர் ஒற்றுமை... அன்பு
அமைதியைப் போற்றிய இராமனின் பண்பு....
வேந்தன் மகன்தான் எனினும் கனிவு....
வேற்றுமையின்றிப் பழகும் நட்பு!
இவற்றை இஸ்லாம் மக்கள் அறிய - அதனை
இனிதாய் தந்தார் தம்மொழி உருதில்!
இராமனின் ஓர் அற்புதக் காவியம் - மக்களின்
இன்றைய வாழ்வை உயர்த்தும் ஓவியம்! - இதனை
இஸ்லாம் மக்களும் கற்றிட வேண்டும்
என்பது இந்த அரும்பின் விருப்பம்!
எம்மதம் எனினும் அடிப்படை அன்பே
என்பதை உணர்ந்தவர் இந்தத் தங்கம்!
மகிதலாத் அமைத்தார் நட்புப் பாலம் - அவர்
மனித குலத்தின் கலங்கரை விளக்கம்!