தஞ்சாவூரு பக்கத்திலே
ஒரத்தநாடு ஊரு!
ஓங்கியடித்த "கஜா' புயலில்
ஊரு முழுதும் சேறு!
மின்கம்பம் மின்சாரம்
மீதமின்றி ஒழிந்தது!
குடிக்கத் தண்ணீர் இல்லாமல்
ஊரே தவித்து நின்றது!
ஓக்க நாடு மேலையூரில்
தூர் வாரிய ஏரி....
நீர் தளும்பி கரையை மீறி
அலைகள் ஓடும் தாவி!
அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள்
அவ்வேரியுள் குளித்தார்!
சுடர் விழி! சுபதினா! கல்பனா...
மூழ்கி மூழ்கிக் களித்தார்!....
ஏரியதன் ஆழ் சேற்றில்
இம்மூவரும் சிக்கினர்....!....
மூவர் இவர் உயிரைக் காக்க
பெண்கள் இருவர் தாவினர்....
சுதந்திராதேவி,ஆரோக்கியமேரி....
துணிந்து நீந்திச் சென்றனர்....
இருவருமே அவர்களோடு
சேற்றில் சிக்கிக் கொண்டனர்...
அந்த நேரம் அவ்வழியில்
வந்தார் ஒருவர் அங்கே....
வந்தவர் பேர் முத்துசாமி....- காப்பாற்ற
நீரினுள்ளே பாய்ந்தார்!....
காப்பாற்றச் சென்றவரும்
சேற்றுக்குள்ளே சிக்கினார்!....
ஆறு பேரும் உயிருக்காக
அலறிக் கூச்சல் போட்டனர்!
அந்த நேரம் வயலைப் பார்க்க
அவ்வூர்த் தம்பி வந்தான்!
ஏரி நீரில் கூச்சல் போடும்
இவர்கள் தவிப்பைப் பார்த்தான்!
பட்டதாரி பொறியாளன்
ஸ்ரீதர் என்பான் நல்லவன்!
பாய்ந்தோடி ஏரிக்குள்ளே
தவித்த உயிர்கள் காத்தான்!
ஆறுபேரைக் காப்பாற்றி
அன்பு மனிதன் ஆனான்!
ஊர்மக்கள் பெரியவர்கள்
பாராட்டினைப் பெற்றான்!
மற்றவர்க்கு உதவி வாழும்
மனிதப் பண்பே உயர்ந்தது!
உயிரைக் காக்க உடனுக்குடன்
செயல் படுவது சிறந்தது!