வயதோ ஏழு!....இளம்பிஞ்சு அவனது
வாய்மொழி கேட்டால் உள்ளம் உருகும்!
பயன்மிகு ஆன்மிக உரை பல ஆற்றும்
பாலகன் அவன் பெயர் "திருக்காமீஸ்வரன்!'
வில்லயனூரே அவனது ஊராம்!
வசிக்கும் பகுதி கிருஷ்ணா நகராம்!
எல்லையில்லாப் பரம்பொருள் தன்னை - அவன்
எடுத்துச் சொல்லும் அழகே அழகாம்!
தேவாரக் கடல் முத்தை எடுப்பான்!...
திருவாசகத் தேன் அள்ளிக் கொடுப்பான்!
எம்மதத்தாரும் விரும்பும் வண்ணம்
எளிமை கொண்டது அவனது பேச்சு!
தமிழகம் புதுவையின் சிற்றூர் பேரூர் - இந்தத்
தங்கத் தம்பியின் உரையைக் கேட்கும்!
"தமிழின் இனிமை இதுவா?' என்று
கேட்கும் கூட்டம் உள்ளம் மகிழும்!
உரையைக் கேட்கும் பல உள்ளங்கள்
ஓடி வந்து பணம் உவந்து அளிக்கும்!
இறைவன் பெருமையை நாளும் கூறும்
இதயம் நினைத்தது ஏழையின் துயரம்!
கிடைத்த பணத்தில் பெற்றோர் துணையுடன் -
ஏழைகள் வாழ்ந்திடப் பொருள்கள் தந்தான்!
ஓர் ஏழை மாணவன்...மாற்றுத் திறனாளி!
மூன்றுச் சக்கர வாகனம் கேட்டான்!
தந்தான் உடனே திருக்காமீஸ்வரன்!
எரிபொருள், பராமரிப்பு என்று
ஏற்படும் செலவுக்கு, கூட ஒரு லட்சம்...-ஏழைக்குத்
தெரிந்தான் கடவுள் அவனது வடிவில்!
கோடையில் பயணியர் துயரம் நீங்க - நிழற்
குடையும் அமைத்தான் வில்லியனூரில்!
அருளுரைதந்து நிழல் தரும் குளிர்தரு! - இந்தக்
குமணனை வாழ்த்துவோம் இப்பாமாலையால்!