
தர்மபுரியில் பச்சையப்பனும், செல்வமணியும் வியாபாரம் செய்து வந்தனர். அதில் பச்சையப்பன் மிக நேர்மையானவன். நல்ல தரமுள்ள பொருட்களை நியாயமான விலைக்கு விற்பார்! ஆனால் கடவுள் பக்தி என்பது அவரிடம் சிறிதும் இல்லை. செல்வமணியோ பணம் ஒன்றே குறியாய் இருப்பவர்! சரக்குகளை மலிவு விலையில் வாங்கி பதுக்கி வைப்பார். அந்தச் சரக்கு இல்லை என்று பொய் கூறுவார். அதற்கான தேவை அதிகரித்ததும் பெரும் லாபத்திற்கு அதை விற்பார்! ஆனால் கடவுளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்.
இப்படியிருக்கையில் தர்மபுரிக்கு ஒரு துறவி வந்தார். இவர்கள் இருவரைப் பற்றியும் கேள்விப்பட்டார்.
ஒரு நாள்.....பச்சையப்பனும், செல்வமணியும் துறவியைப் பார்க்க சேர்ந்தே சென்றனர்.
செல்வமணி துறவியைப் பார்த்து, "ஐயா!....எங்களில் ஒருவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். மற்றொருவருக்கு அது இல்லை....யார் நம்பிக்கை உள்ளவர்?...யார் நம்பிக்கை இல்லாதவர்?....என்பதை உங்களால் கூற முடியுமா?'' என்று கேட்டார்.
ஞானி உடனே அதற்கு பதில் கூறினார். இருவருக்கும் அதிர்ச்சி! ஏனென்றால் ஞானி தவறான பதில் கூறியிருந்தார். அதை அவரிடம் கூறினர்....ஞானியோ சற்றும் பதட்டமடையவில்லை....தன் பதில் சரியென்றே கூறினார். கடவுள் நம்பிக்கையற்ற பச்சையப்பன் சிரிசிரி என்று சிரித்தார்.
"நீங்கள் கூறுவது உண்மை. செல்வமணி இறைவனைத் தொழுபவர்தான்! ஆனால் வியாபாரத்தில் பேராசையால் பொய் சொல்லுகிறார். இது இறைவனுக்குப் பிடிக்காது!.....இறைவனே இல்லை என்று கூறும் பச்சையப்பனோ தன்னுடைய வியாபாரத்தில் சிறிதும் தவறு செய்வதில்லை....நேர்மையை கடைப்பிடிப்பவராக இருக்கிறார். இது இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல்!....இப்போது சொல்லுங்கள் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயலைச் செய்பவர்தானே உண்மையான இறை பக்தர்! இறைவனுக்கு பிடிக்காத செயலைச் செய்வதால் அவருடைய இறை வணக்கம் போலியானது! அவர் எப்படி பக்தராக இருக்க முடியும்? இப்போது சொல்லுங்க....என் பதில் சரியானதுதானே?''
-அம்பரீஷன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.