பூத்துக் குலுங்கும் தாமரைபோல்
புதிய வருஷம் உதித்தது!
காத்துக் கிடந்த காலம் அதனை
கரம் குவித்துத் தொழுதது!
தெருவை அடைத்து வர்ணக் கோலம்
அக்காள் அமர்ந்து புனைந்திட்டாள்
அருமைத் தாத்தா கனைத்தவாறே
பஞ்சாங்கத்தை நெருடிட்டார்!
அப்பா மனசை அறிந்து அம்மா
அடுக்களைக்குள் நுழைந்திட்டாள்!
தப்பாது இன்று மதிய உணவில்
பாயாசத்தில் இனிப்படா!
உணவில் இனிப்பை விரும்பிடும் நாம்
உணர்வில் இனிப்பை நிரப்புவோம்!
மணக்கும் ஏலக்காயைப் போல
மனசு மணக்கப் பழகுவோம்!
ஒற்றுமை போற்றி சமுதாயத்தில்
பேதமின்றித் திகழுவோம்!
கருணை புத்தன் பாரதத்தில்
அமைதி காத்து மகிழுவோம்!