மரங்களின் வரங்கள்! வாழ்வை வளமாக்கும் - தேக்கு மரம்

நான் தான் தேக்கு மரம் பேசுகிறேன். உலகில் நான் மிகவும் மதிப்பு மிக்கவன். பணம் தரும் மரம் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்
மரங்களின் வரங்கள்! வாழ்வை வளமாக்கும் - தேக்கு மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 
 நான் தான் தேக்கு மரம் பேசுகிறேன். உலகில் நான் மிகவும் மதிப்பு மிக்கவன். பணம் தரும் மரம் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். எனது தாவரவியல் பெயர் டெக்டோனா கிரான்டிஸ் என்பதாகும். கிரேக்க மொழியில் டெக்டன் என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது, கிராண்டிஸ் என்றால் பிரமாதமானது என்று பொருள். அதாவது நான் தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரமாக இருக்கிறேன். நான் வென்பினேசிய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஓங்கி வளர்ந்து உறுதியாக இருப்பேன். என் இலைகள் அகலமாகவும், கொத்து கொத்தான பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டவனவாகவும் நான் இருப்பேன். நான் பலமுள்ள பலகைகளை மட்டுமல்ல, உங்களுக்கு பலமான வருமானத்தையும் கொடுப்பேன்.
 தோல் நோய்களை குணப்படுத்தவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், காய்ச்சலை தணிக்கவும் நான் உதவுவேன். சிலர் என் இலையையும், வாழை இலையைப் போலவே உணவு உண்ணவும் பயன்படுத்தறாங்க. என் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை நீங்கள் பருகுவதன் மூலம் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது. மூக்கில் வடியும் இரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த மருந்தாகிறது.
 என் விதைகளைக் கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை செய்யலாம். இந்தத் தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு, பேன் போன்ற தொல்லைகளிலிருந்தும், முடி கொட்டுதல், இள நரை பிரச்னை போன்ற தொல்லைகளிலிருந்தும் விடுதலை பெறலாம். நுண் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் என் விதைகள் பயன்படுகிறது. என் பூக்களைப் பயன்படுத்தி நுண்கிருமிகளைப் போக்கி நுரையீரல் தொற்றை சரி செய்யும் மருந்தை தயாரிக்கிறார்கள்.
 நான் இலையுதிர்க்கும் மர வகையைச் சேர்ந்தவன். நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இலையை உதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படுவேன். சிறு பூச்சிகள், கரையான்கள் என்னை பார்த்தால் பயந்து ஓடிடும். நான் அவ்வளவு வலிமையானவன். நான் ஒரு ஒளி விரும்பி. நல்ல சூரிய ஒளி கிடைத்தால் நான் நல்ல முறையில் வளருவேன்.
 நான் உயர்தர மரமாக இருப்பதால் என்னை எல்லோரும் விரும்புவாங்க. நான் உங்களுக்காக நீண்ட நாட்கள் உழைப்பேன் என்பதால் வீட்டு உபயோகப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சிலைகள், கட்டில்கள், பீரோ, அலமாரி, கதவுகள், கப்பல் கட்டுமானம் போன்ற அனைத்து கட்டுமான பணிகளுக்கும் நான் பயன்படுகிறேன்.
 இயற்கையின் வழியில் செல்வோம். மரங்களை வளர்த்து பயன் பெறுவோம், ஆரோக்கியத்தைக் காப்போம். பசுமையான பாரதத்தை உருவாக்குவோம். நான் அட்சய தமிழாண்டை சேர்ந்தவன். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com