டிராகுலா எறும்பு!
By | Published On : 23rd November 2019 11:16 AM | Last Updated : 23rd November 2019 11:22 AM | அ+அ அ- |

கருவூலம்
சிறிய அளவில் நமக்குத் தொல்லைகளைத் தந்தாலும், இந்தச் சிறிய எறும்புகள் மிகவும் அதிசயமானவை, சுறுசுறுப்பானவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. எப்படியென்றால்...
பெரிய வெள்ளம் வரட்டும், அத்தனை எறும்புகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு எந்திரன் பட ரோபோ போல ஒரு படகாகக்கூட மாறி, வெள்ளத்தில் நீந்தித் தப்பி விடும்.
நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியக்கூடியவை.
தங்களது உடல் எடையைப் போல 20 மடங்கு அதிக எடையைத் தூக்கக்கூடியவை. எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் மிகச் சரியான உபகரணங்களைத் தேர்ந்து எடுக்கக்கூடிய அதிசயத் திறமையும் எறும்புக்கு உண்டு.
அதிலும் "டிராகுலா எறும்பு' என்று ஒரு வகை இருக்கிறது. இது தனது தாடையை ஒரு செகண்டுக்கு 90 முறை திறந்து மூடக்கூடிய வல்லமை பெற்றது. இதுதான் உயிரின வேகத்திலேயே மிக, மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
இதனுடைய வேகத்தைக் கணக்கிட மிகவும் சக்தி வாய்ந்த கேமராக்களைக் கொண்டு இவற்றின் தாடை இயக்க வேகத்தை அளந்திருக்கிறார்கள்.
இவை ஒரு தடவை கடித்தாலே மயக்கம் வந்துவிடுமாம். சிறிய பூச்சிகளை இப்படிக் கடித்து மயங்க வைத்து, தங்களுடைய இருப்பிடத்துக்கு இழுத்துக் கொண்டு போய் அங்குள்ள உணவு கோ-டவுனில் போட்டு வைத்துக் கொள்பவை.
இந்த வகை எறும்புகள் ஆப்ரிக்கா, ஆசியாவில் சில நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப் படுகின்றன. இவை எப்போதும் நிலத்துக்கடியிலும் மரங்களின் அடிப் பாகங்களிலும் வசிக்கின்றன. இதனால் இவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.