எல்லோர்க்கும் தான் தாத்தா! - மகாத்மா
காந்தி எனும் நம் தாத்தா!
பாலரோடு, இளையோர்க்கும்
மூத்தோர்க்கும் வழிகாட்டி!
இடுப்பில் அரையாடை !
தோளில் ஒரு துண்டு!
படிப்பினையாய் வாழ்ந்தார்!
பாரோர் வியப்புற்றார்!
கை ராட்டையிலே நூல் நூற்று -கீதை
வழியில் தான் நடந்து
கடமையை முடித்திட்டார்
கண்டோம் நாம் விடுதலையை!
கடிகாரம் பார்க்கவில்லை!
துளிகாலம் பிசகவில்லை! - தேச
விடுதலைக்காகத் தன்
வாழ்நாளை அர்ப்பணித்தார்!
உயிர்வாழச் சிறிதுணவு! - மானம்
உடல் மூடத்தான் உடைகள்!
சுயமாய் உழைத்துண்ணும் - வாழ்வே
சொர்க்கம் எனச் சொன்னார்!
உள்ளம் எல்லாம் தூய்மை
உதிர்த்ததெல்லாம் வாய்மை!
அஹிம்சை ஆயுதத்தால் - இவர்
அந்நியரை வென்றுவிட்டார்!
வேற்றுமை எல்லாம் விலக்கி
ஒற்றுமையை இவர் வளர்த்தார்!
கண்கண்ட தெய்வம் இவர் - எனக்
கரம் கூப்பி வணங்கிடுவோம்!