கருவூலம்: தெர்மோகோல் கட்டிடங்கள்!
By கோட்டாறு ஆ . கோலப்பன் | Published On : 27th February 2021 06:00 AM | Last Updated : 27th February 2021 06:00 AM | அ+அ அ- |

பல்வேறு விதமான புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தி பல துறைகளும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இதற்குக் கட்டுமானத் துறையும் விதி விலக்கல்ல! வழக்கமான பொருள்களுக்கு பதிலாக மாற்றுக் கட்டுமானப் பொருள்களை உபயோகப்படுத்துவதில் நமக்கு இன்னும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது! நாம் இன்னும் பாரம்பரியமான கட்டுமானப் பொருள்களையே பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் கட்டுமான நிறுவனங்கள் கூட இந்த புதிய கட்டுமானப் பொருள்களை உபயோகப்படுத்த சற்று தயக்கம் காட்டுகின்றன.
சிறிய வீடுகளில் தொடங்கி மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை செங்கற்கள், மணல், சிமென்ட் கலவை இவற்றைக் கொண்டே பெரும்பாலும் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் தற்போது ஈ.பி.எஸ். என்று அழைக்கப்படும் தெர்மோகோல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
உயர் அழுத்த நிலையில் தெர்மோகோல் உறுதியாகி விடுகிறதாம்.
கட்டுமானங்களின் வெளிப்பூச்சுக்கு, "எக்ஸ்டர்னல் இன்சுலேஷன் அண்ட் ஃபினிஷ் சிஸ்டம்' என்னும் சிந்தடிக் பூச்சைப் பயன்படுத்துகின்றனர்.
ஈ.பி.எஸ். ஷீட்களை கம்பிகளால் கட்டி, பாலிமர் சேர்க்கப்பட்ட சிமென்ட் கலவையுடன் வெளிப்புறத்தில் பூசி விடுவார்கள். இத்தகைய பொருள்களுடன் அமையும் கட்டடத்தின் வெளிப்பூச்சு சிமென்ட் கலவைப் பூச்சுக்கு இணையாக வெயிலையும், மழையையும் மற்ற எல்லா சிதோஷ்ண நிலைகளையும் எதிர்கொள்ளும் என்கிறது ஈ.பி.எஸ். பயன்பாடு குறித்த இணைய தளம்!
இன்று இந்தியாவிலும் ஈ.பி.எஸ். தொழில் நுட்பத்தில், தெர்மோகோலை உபயோகப் படுத்தி, கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன.