நேரு மாமா நம் மாமா
நேர்த்தி மிக்க ஒருமாமா
பாருக்குள்ளே அவருக்கு
பண்டிதர் என்ற பேருண்டு
கல்வி கேள்வி கலைஞானம்
அள்ளி இறைக்கும் பெருஞ்செல்வம்
அவருக்குண்டு அறிவோமே
கற்றுத் தேர்ந்த பெருஞானி
பெருமை மிக்க நம்நாட்டின்
பிரதமராக வீற்றிருந்து
அருமையாக நம்நாட்டை
ஆண்ட பெருமை அவர்க்குண்டு!
பஞ்ச சீலக் கொள்கையினை
பாரே போற்றக் கொடுத்ததுவும்
அஞ்சா நெஞ்ச உரத்தோடு
அணிகள் சேரா நின்றதுவும்
புகழைச் சேர்த்தன அவருக்கு
பெருமை வந்தது நாட்டுக்கு!
பொழியும் அன்பு கருணையினால்
புன்னகை புரிந்தார் நம்நேரு
அன்னார் பிறந்த பொன்னாளை
அன்புப் பிள்ளைகள் இந்நாளில்
குழந்தைகள் தினமென உளமார
கொண்டாடி மகிழ்வர் எந்நாளும்!