காட்டில் ஒரு யானையாம் - கண்
பார்வை மங்கி நடந்ததாம்!
வழி தெரியாமல் தவித்ததாம்
தடுக்கிக் கீழே விழுந்ததாம்!
கால் இழந்த குருவி இதைக்
கண்டு மிகவும் வருந்தியே
நட்பு கொண்டு யானைக்கு
உதவ மனம் கொண்டதாம்!
குருவி தினமும் யானைமேல்
ஏறி வழி காட்டுமாம்
காட்டில் இரண்டும் திரியுமாம்
களைத்து வீடு திரும்புமாம்!
யானை நடந்து சென்றது -வன
விலங்குகள் இதைக் கண்டன
"யானை மீது குருவியா?' எனக்
கூடிக் குழுமி சிரித்தன!
இதைக் கேட்ட யானையும்
சிரித்துக் கொண்டே சொன்னதாம்!
"யார் சிரித்தால் நமக்கென்ன?- நம்
வேலையை நாம் தொடருவோம்!
எதுவும் நமக்குத் தடையில்லை!
ஒருவருக்கொருவர் உதவியே
குறையை மறந்து வாழுவோம்
வாழ்ந்து காட்டி வெல்லுவோம்!
உண்மை தெரிந்தால் அப்போது
கேலிப் பேச்சு அடங்கிடும்!
இரக்கம் கொண்ட இருவரும்
இன்ப மாக வாழுவோம்'!
"உண்மை' அறிந்த விலங்குகள்
கேலி பேச்சை நிறுத்தின
யானை, குருவி இரண்டிடமும்
மன்னிப்பு கேட்டு வருந்தின!