1948ஆம் ஆண்டு முதல் 1952 வரையிலான 5 ஆண்டுகள் சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலமாகும்.
அந்தக் காலத்தில் சிறுவர்களே நிருபர்கள்தான். ஓவியங்களையும் வரைந்தனர். புகைப்படங்களையும் எடுத்தனர். சிறுகதைகள் முதல் தொடர்கதைகள் வரை எழுதினர். சிலர் சிறுவர் பத்திரிகைகளின் ஆசிரியர்களாகவே பொறுப்பும் வகித்தனர். அந்தக் காலத்தில்தான் நான் எழுத்தாளர் ஆகினேன்.அப்போது நான் பள்ளி மாணவன்.
1949 முதல் நான் படித்த திருவொற்றியூர் இலவச உயர்நிலைப் பள்ளியில் மீனாட்சி சுந்தரம் என்ற மாணவன், "மான்' எனும் சிற்றேடு ஒன்றை நடத்தினான்.
இந்தப் பத்திரிகையில்தான் "பூவண்ணன்' எனும் பெயரில் என் முதல் எழுத்தோவியம் வெளிவந்தது. ஏறத்தாழ அதே காலத்தில் பத்தாம் வகுப்பு படித்த எஸ்.சௌந்தரராஜனும் சௌந்தர் எனும் புனைப்பெயரைக் கொண்டு "ரேடியோ' எனும் வார இதழை வெளியிட்டார்.
(குழந்தைக் கவிஞர் டாக்டர் பூவண்ணன் எழுதியது)