துள்ளுவதோ முதுமை!
இன்றைய பரபரப்பான சூழலில் கிரிக்கெட் தவிர, மற்ற விளையாட்டுகள் மீதான ஆர்வம் அனைத்துத் தரப்பினரிடமும் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. ஆனால், எண்பதைக் கடந்தபோதிலும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று அனைவரைய


இன்றைய பரபரப்பான சூழலில் கிரிக்கெட் தவிர, மற்ற விளையாட்டுகள் மீதான ஆர்வம் அனைத்துத் தரப்பினரிடமும் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
ஆனால், எண்பதைக் கடந்தபோதிலும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் கே.எஸ்.முருகேசன்.
மனிதன் ஓடுவதன் மூலம் தனது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் என்பதற்கு இவரே உதாரணம். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் தெற்கு ரதவீதியைச் சேர்ந்த இவருக்கு தற்போது வயது 88.
13 வயதில் தனியார் ஆலைக்குப் பணிக்குச் சென்ற இவர் 58-வது வயதில் ஓய்வு பெற்றார். 20 ஆண்டுகள் தனது ஓய்வுக் காலத்தைக் கழித்த முருகேசன், தனது 78 வயதில் ஓட்டத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக முதல்முறையாக 2000-ல் கோவையில் நடைபெற்ற முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார்.
அதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடம் பெற்றார். அதன்பிறகு 2001-ல் கடலூரில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். 2002-ல் சென்னையில் நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார்.
2003-ல் திருநெல்வேலி, தஞ்சையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டார்.
அதே ஆண்டு இம்பாலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான முதியோருக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடமும் பெற்று வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
விளையாட்டு ஆர்வம் குறித்து முருகேசனிடம் பேசினோம்:
""ஆலைப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 20 வருடம் வீணாய் பொழுதைக் கழித்தேன். பின்னர் ஓட்டப்பந்தயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தை அறிந்த திருவள்ளுவர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் வீரபாகுதான் போட்டிகளில் பங்கேற்கச் செய்தார்.சிவந்திபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்றேன். மனிதன் வாழ்வில் தான் சார்ந்துள்ள பணிக்காக ஓடுகிறான். பஸ்ûஸப் பிடிக்க ஓடுகிறான். மாணவர்கள் பள்ளிக்கு வேகமாகச் செல்ல ஓடுகிறார்கள். திரையரங்குகளில் படம் பார்க்க பெண்கள் குழந்தையுடன் ஓடுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைக்காக ஓடுகிறான். கால்கள் திடமாக இருந்தால் உடல்நலமும் ஆரோக்கியமாக இருக்கும். விளையாட்டில் சிறந்தது ஓட்டப்பந்தயம்தான். அதனால் தினமும் நான் ஓடுகிறேன். பதக்கமும் பெறுகிறேன்.''
சதாபிஷேகம் நடந்த அடுத்த நாள் ஓட்டத்தில் கலந்துகொள்ள தன் கணவர் முருகேசன் சென்றதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார் அவரது மனைவி ஆவுடையம்மாள். உற்சாகம், ஆர்வம் இருந்தால் சாதனைக்கு வயது தடையில்லை. அது கே.எஸ்.முருகேசன் விஷயத்தில் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...