புற்றுநோயாளிகளுக்கும் மறுவாழ்வு!

கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு புற்றுநோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து, அரசு மருத்துவர் மறுவாழ்வு அளித்துள்ளார்.
புற்றுநோயாளிகளுக்கும் மறுவாழ்வு!
Updated on
2 min read


கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு புற்றுநோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து, அரசு மருத்துவர் மறுவாழ்வு அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த தேவராஜன் - தமிழரசி தம்பதியின் மகன் மருத்துவர் த.தே.பாலமுருகன். முப்பத்து ஏழு வயதான இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை,  மண்டலப் புற்றுநோய் நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு புற்றுநோயாளிகளுக்கு அறுவைச்சிகிச்சைகள் செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இதற்காக, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடன் ஓர் சந்திப்பு:

மருத்துவத் துறையில் பெற்ற பட்டங்களும், விருதுகளும் என்ன?

சென்னை மருத்துவக் கல்லூரியில்  2002- ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.  பட்டத்தையும், 2009- ஆம் ஆண்டு பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவில் (எம்.எஸ்.) பட்ட மேற்படிப்பும் படித்தேன்.   2017 -ஆம் ஆண்டு நீட் தேர்வின் மூலம் சிறப்பு உயர்நிலை அறுவைச் சிகிச்சைக்கான தேசிய நுழைவுத்தேர்வில் தகுதியின் அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஓமந்தூரார் புற்றுநோய் உயர் அறுவைச்சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பட்டமும் பெற்றேன்.

பின்னர் புதுதில்லி தேசிய தேர்வுகள் முகமை நடத்திய புற்றுநோய் உயர்நிலை அறுவைச் சிகிச்சைப் பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்று,  தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன். இதற்காக தங்கப்பதக்க விருது பெற தேர்வாகினேன்.

இதற்காக, புதுதில்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற விழாவில், தங்கப்பதக்கத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சூக் மாண்டவியா வழங்கினார். 

கிராமப்புறத்தை பூர்வீகமாகக் கொண்டு,அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று,கிராமப்புற அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவருக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத்துறையில் மத்திய அரசின்விருது கிடைத்திருப்பது தமிழகத்துக்கு இதுவே முதல் முறையாகும்.

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து..?

கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு புற்றுநோயாளிகளுக்கு அறுவைச்சிகிச்சைகள் செய்துள்ளேன். இவற்றில் மார்பகம், தைராய்டு, வாய்ப்புற்று, இரைப்பை, உணவுக்குழாய், குடல், கணையம், கல்லீரல், நுரையீரல், சிறுநீர்ப் பாதை, கருப்பை வாய்,  எலும்பு, தசை, தோல் முதலிய புற்றுநோய் அறுவைச் சிகிச்சைகளும் அடங்கும். 

புற்றுநோய் குறித்து தங்கள் கருத்து..?

புற்றுநோய் என்பது குணப்படுத்தக் கூடிய நோய். இதை ஆரம்பத்தில் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் அது உடலில் உள்ள மற்ற செல்களுக்கு வேகமாகப் பரவி அதுவே உயிருக்கும் ஆபத்தாக முடிந்து விடும். தற்போது காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் அதநவீன புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் உள்ளன. இங்கு இலவசமாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தியாக மனப்பான்மையுடன் பல மருத்துவர்கள் பணியாற்றுவது கூடுதல் சிறப்பு. எந்தவிதச் செலவும் இல்லாமல் காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு காட்டி வரும் பங்களிப்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com