பிரிட்டனில் பரதம் கற்றுத் தரும் பெண்!

பிரிட்டனில் உள்ள இப்ஸ்விச் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடல் கலையான பரதத்தைக் கற்றுத் தந்து,  இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார் தாரணி ரத்தினவேல்.
பிரிட்டனில் பரதம் கற்றுத் தரும் பெண்!
Updated on
2 min read

பிரிட்டனில் உள்ள இப்ஸ்விச் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடல் கலையான பரதத்தைக் கற்றுத் தந்து,  இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார் தாரணி ரத்தினவேல்.

மதுரை மாட்டுத் தாவணியைச் சேர்ந்த பர்னீச்சர் வியாபாரி  ரத்தினவேலு- ரேவதி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் தாரணிக்கு 5 வயதாக இருக்கும்போதே ஆசிரியை சாந்தினி அருணகிரியிடம் பரதம் கற்றுக் கொண்டார்.

பிளஸ் 2-வுக்குப் பின்னர் மதுரை கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் படிப்பும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பரத நாட்டியப் படிப்பும் தாரணி படித்து முடித்தார். பின்னர், அவர் பிரபல நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திடம் 4 ஆண்டுகள் பயிற்சியில் பரதக் கலையின் நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்.  எம்.ஏ. படிக்கும்போது திருமணம். கணவர் சோமசுந்தரமோ பிரிட்டனில் மென்பொறியாளர். படிப்புக்குப் பின்னர் தாரணியும் பிரிட்டன் சென்றார்.

லண்டனில் இருந்து சுமார் ஒரு மணி நேர ரயில் பயணத்தில் இப்ஸ்விச் என்ற பெரும்பான்மையாக ஆங்கிலேயர்கள் வசிக்கும்  விவசாயப் பகுதியில் கணவர் சோமசுந்தரத்துடன் குடியேறினார் தாரணி.

 2021-ஆம் ஆண்டு முதல் "ஹாலாஸ்யம் நடனப் பள்ளி'  என்ற பெயரில் பரதக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார் தாரணி.  "ஹாலாஸ்யம்' என்றால் சம்ஸ்கிருதத்தில் மதுரை என்று பொருள்.

கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆன்லைனிலும் நேரடியாகவும் பரதம் கற்றுத் தருகிறார் தாரணி.   இப்போது 25 வயதாகும் தாரணிக்கு 5 வயது முதல் 35 வயது வரையுள்ள மாணவிகள் பரதத்தில் உண்டு. 30 வயதுக்கு மேற்பட்ட 8 பேர் பரதம் பயில்கின்றனர்.

2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் இப்ஸ்விச்சில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், தாரணியின் பரத நாட்டியத்தைப் பார்த்து,  இப்ஸ்விச் மேயர் ஜான் குக் பாராட்டினார்.

 இது தொடர்பாக தாரணி ரத்தினவேல் கூறியதாவது:

"இந்தியக் கலைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது.  அதிலும்,  இறைவனுக்கு மிகவும் பிடித்த பரதக் கலையை பிரிட்டன் மக்கள் மிகவும் விரும்பி ரசிக்கின்றனர்.

இந்திய வம்சாவளியினர் தங்கள் குழந்தைகளுக்குப் பரதம் கற்றுத்தர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 எங்கள் நடனப் பள்ளியில் ஆன்லைனில் ஒரு மணி நேரம் வீதம் மாதத்துக்கு 8 நாள்கள் பரதம் கற்றுத் தருகின்றேன். நேரடியாகவும் கற்றுத் தருகின்றேன். 

நேரடியாகவும் பரத நாட்டிய  நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சியாவது நடத்துகிறேன்.  இது பரதம் கற்போருக்கு ஊக்கமாக அமைகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் ஆங்கிலேயர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று மிகவும் பாராட்டுகின்றனர்.  பரதம், குச்சுபுடி, மிருதங்கம் உள்ளிட்ட கலைகளுக்கு அங்கீகாரம் தரும் "ஓரியண்டல் போர்டு'  என்ற அமைப்பு நடத்தும் தேர்வுகளுக்கு எங்கள் மாணவர்களை அனுப்புகிறோம்.

பரதக் கலையிலும் கிரேடு 1 முதல் கிரேடு 7 வரையிலும் தேர்வு முறை உண்டு. அதன்பின்னர்,  டிப்ளமோ,  போஸ்ட் டிப்ளமோ ஆகிய படிப்புகள் பிரிட்டனில் உள்ளன.  அதில், பலர் கிரேடு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

மே மாதத்தில் லண்டன் பாரதிய வித்யா பவனில் மிகப் பெரிய அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தியர்களுக்கு மேற்கத்திய கலை, கலாசாரத்தின் மீது மோகம் இருந்தாலும் நமது விழுமியங்கள், கலாசாரம் போன்றவையும் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com