

குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தவர் லெட்சுமி ராமகிருஷ்ணன். இதைத் தொடர்ந்து இயக்குநராகவும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்தார். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'அம்மணி', 'ஹவுஸ் ஒனர்' உள்ளிட்ட படங்களின் அழுத்தமான திரைக்கதை பரவலாக பேசப்பட்டது. இப்போது இவர் எழுதி இயக்கியுள்ள படம் 'ஆர் யூ ஓகே பேபி'.
சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன், 'ஆடுகளம்' நரேன், ரோபோ சங்கர், பவல் நவகீதன், கலைராணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைத்திருக்கிறார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. 'குழந்தைகளின் உலகம் அப்பழுக்கு இல்லாத பிராயம். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான்.
குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை.
அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்'' என்றார் லெட்சுமி ராமகிருஷ்ணன். எதிர்வரும் 22 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.