'வனப்பகுதிகளிலும் மலைகளிலும் வாழும் பழங்குடியினர், கல்வியறிவு குறைவானவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்' என்று கூறப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான எஸ்.சுமதி, அந்த இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலிருந்து வளத்தி செல்லும் சாலையிலுள்ள கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த 29 குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் மீட்கப்பட்டன. அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் சுமதி. பெற்றோர் சக்கரை-குப்பு. இவர்களது சொந்த ஊர் அம்மாகுளம்.
தொடக்கக் கல்வியைத் தனது சொந்த ஊரான அம்மாகுளத்திலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் சுமதி. தொடர்ந்து 2011-ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் உணர்வுநீக்க தொழில்நுட்பப் படிப்பை முடித்து (மயக்க மருந்து டெக்னீசியன்) , சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
பின்னர் செஞ்சி வட்டம், மேல்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த சிவாவைத் திருமணம் செய்துகொண்ட சுமதிக்கு, ஒன்பது வயதில் தேவதர்ஷினி என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு, இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும், மாணவர்களுக்காகவும் பல்வேறு சமூகப் பணிகளை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அவர் கூறியது:
'கல் குவாரியில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த நிலையிலும், பெற்றோர் என்னைப் படிக்க வைத்தனர். படிப்பு முடித்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். திருமணம் செய்து வைத்த நிலையில், நான் எனது வேலையிலிருந்து விலகி, மேல்கலவாய் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து கன்னியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவைத் தொடங்கி, அதை நடத்தி வருகிறேன்.
இந்தக் குழுவில் முதல் 5 ஆண்டுகளில் 16 உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது 13 பேர் உள்ளனர். அரசு வழங்கும் சுழல்நிதி, கடனுதவி போன்றவற்றைப் பெற்று, முறையாகத் திருப்பிச் செலுத்தி வருகிறோம். இந்தக் குழுவில் கடன் பெற்றுத் தான் 2024-ஆம் ஆண்டில் வீடு கட்டி முடித்தேன். தற்போதும் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவராக இருந்து கொண்டு, குழுவை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். குழுவில் பலருக்கு வீடுகளைக் கட்டித் தந்துள்ளேன். கடனுதவிகளையும் பெற்றுத் தந்துள்ளேன்.
மாணவர்களுக்கு கல்வி
எங்கள் பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கும் பணியை ú மேற்கொண்டு வருகிறேன். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் தன்னார்வலராகப் பணியாற்றத் தேர்வெழுதி, அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், எனக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அதைப் பற்றி கவலைகொள்ளாமல், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கெனவே முதியோர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியையும் நான் மேற்கொண்டேன். இந்தப் பணிகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (தற்போது விபி-ஜி ராம்-ஜி) கீழ், பணித்தளப் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறேன்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கல்விக்காக, பொருளாதார மேம்பாடுக்கான பணிகளை நான் மேற்கொண்ட போதும், எனது படிப்புக்கு ஏற்ற வேலை அமையவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. எனவே, படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை வழங்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்கிறார் சுமதி.
படம் -ஆர்.ஸ்ரீராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கவன ஈர்ப்பு சிகிச்சை
இருளர் இன மக்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் பெண்!

சா்ச்சை பேச்சு: சிங்கப் பெண் அதிரடிப்படையில் இருந்து எஸ்எஸ்ஐ விடுவிப்பு

ஜவ்வாது மலையில் பூக்கும் கல்விச் சோலை! விதையாகும் வேலூர் இளைஞர்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


