பொ.ஜெயச்சந்திரன்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மே 10- இல் கொண்டாடப்படுகிறது. தாய்மையின் சிறப்பை உணர்ந்தே 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
முதுமை வரையிலும் பாசம், தியாகம், அர்ப்பணிப்பு, இரக்கம், நேசம் என தன்னையே உருக்கி உருக்கி தன் குழந்தையை உருவாக்குபவள் தாய். நாள்களில் போற்றப்பட வேண்டியவள் அல்ல; நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டியவள். இந்த நாள் குறித்து பெண் ஆளுமைகள் சிலரிடம் பேசினோம்.
ச.குருஞானாம்பிகா, மேடைப் பேச்சாளர், கோவை
அம்மா என்பது பொதுச் சொல். உலகின் அனைத்து உயிரினங்களிலும் இன்னொரு உயிரை ஈனுகிற பொறுப்பை பெண்மைக்கே இயற்கை வழங்கியிருக்கிறது. ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் உண்பதற்காக மட்டுமே வாழ்வை தக்க வைக்கும் அமைப்பைப் பெற்றிருந்தும்கூட பறவைகளாலும், விலங்குகளாலும் தான் பெற்ற உயிருக்கு அன்பு செலுத்துகிற தாயன்பைக் காண முடிகிறது.
தாய்மையை இலக்கியங்கள் சிறப்புற பதிவு செய்துள்ளன. ஒரு பெண் தான் கருவுற்றிருக்கும் காலத்தில் உடலால் பல துன்பங்களை அடைகிறாள். ஆனால், குழந்தை பிறந்தவுடன் மழலை முகம் பார்த்தவுடன் தன் துன்பத்தை மறந்து விடுகிறாள். அதனால்தான் அவள் தெய்வத்துக்கு நிகர்.
அன்னையர்கள் தன் வயிற்றை பட்டினி போட்டு குழந்தைகளைக் காப்பவர்கள். துயரத்தின் பிடியில் நின்றாலும் துவளாமல் வளர்ப்பவர்கள். குழந்தை தடுக்கி விழுந்தபோதெல்லாம் தாங்கிப் பிடிப்பவர்கள்.
தான் துன்பத்தை அனுபவித்தாலும் பொறுத்துக் கொண்டு நல்வழிப்படுத்துபவர்கள். வாழ்க்கை பல்வேறு இன்னல்களைத் தந்தபோதும் குழந்தைகளுக்காகவே அவற்றை ஏற்று அனுபவித்தவர்கள். உந்துசக்தியாகவும், ஊக்கச் சக்தியாகவும் நின்று சாதாரணக் குழந்தைகளை சாதனைக் குழந்தைகளாக உருவாக்குபவர்கள்.
அம்மா என்பவள் குழந்தையின் உடலுக்கு உணவிடுபவள் மட்டுமல்ல; உயிருக்கும் உணர்வுக்கும் உரமிடுபவள். மனித உறவுகளில் நிகரற்ற உறவாக நிலைத்திருக்கும் பேரன்பின் உறைவிடம், அருளின் இருப்பிடம், ஆற்றலின் பிறப்பிடமாய் திகழும் அன்னையை ஆயுள் முழுவதும் போற்றுவோம்.
முனைவர் யாழ்.ச.சந்திரா, தேர்வுக் கட்டுப்பாட்டாளர், மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி, மதுரை
பாரதி, கம்பர், பாரதிதாசன், வள்ளுவர், நா.பார்த்தசாரதி, மு.வரதராசனார், கல்கி, காண்டேகர், புதுமைப்பித்தன், ஜெகச்சிற்பியன், அகிலன் உள்ளிட்டோரின் படைப்புகளை என் அம்மாவின் கைகாட்டலில் நான் வாசித்துள்ளேன்.
எனது வாழ்வின் இக்கட்டான நேரத்தில் தைரியத்தை அளித்த அவர், பணியின் பொருட்டு நான் வெளியூர் செல்ல நேர்ந்தபோது, என் மகள் அருணா பிரியதர்ஷினியை கண்ணின் மணியாகக் காத்தவர். மனிதர்களின் வழிபடு தெய்வம் அன்னை.
கெள.பத்மபிரியா, ஏ.ஆர்.கோச்சிங் சென்டர், பெருங்களத்தூர், சென்னை
இன்றைய வேகமான உலகத்தில், பலர் தங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தில் தாயைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். தாயை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். தாயுடன் பேசுவதற்கு, மனதை மகிழ்விப்பதற்கு, அரவணைத்துக் கொள்வதற்கு நேரத்தைக் கண்டிப்பாகச் செலவிடவேண்டும்.
தாய் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் இருள் இல்லை. தாயின் ஆசிர்வாதம் இருந்தால், எந்தத் தடைகளையும் கடக்க முடியும். அதனால் தாயைப் போற்றுவோம். தாயை மதிப்போம். தாயின் அன்பை என்றும் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்வோம்.
சு.சுபா, ராஜபாளையம்
நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு வழிகாட்டுபவர்தான் தாய். மனிதர்கள் பிறந்த தருணத்தில் இருந்து, இறுதி வரை அவனுடைய வாழ்வில் ஒளி வீசுவதற்கும், நேசிப்பதற்கும் ஓர்உறவு இருக்கிறது என்றால், அது தாயைத் தவிர வேறுயாரும் இல்லை. அவர் எந்த உறவையும் ஒப்பிட முடியாத, எந்த அன்பாலும் அளக்க முடியாதவர். முதல் ஆசான், முதல் தோழி, முதல் வழிகாட்டி, முதல் பாதுகாவலர் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே உருவில் கொண்டவர்தான் அன்னை.
வி.லலிதா, இல்லத்தரசி, பேட்டை, காரைக்கால்
அன்னையை ஆராதிக்கும் கொண்டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன. வசந்த காலத்தின் தொடக்கத்தை அவர்கள் தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினர். ரோமர்கள் சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாகவே வழிபட்டனர். கிறிஸ்துவத்தின் வருகைக்குப் பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா ஆலயத்துக்கு மரியாதை செய்வதாக மாறியது. இவை எல்லாமே சமய அடிப்படையில் உருவானவை. ஆனால், நவீன உலகில் கொண்டாடும் அன்னையர் தினம் அப்படி அல்ல. அதற்கு மாறுபட்ட வரலாறுகள் உண்டு.
சாரம்மா, ஆலுவா, கேரளம்
குழந்தை பிறந்தவுடன் தாய் தன்னுடைய தூக்கத்தை விட்டுக் கொடுத்து, குழந்தையின் ஒவ்வொரு அழுகையையும் கவனித்து, அதன் தேவைகளைப் புரிந்து கொள்கிறாள். குழந்தை சிரித்தால் அவளுக்கு உலகமே கிடைக்கும். குழந்தை அழுதால் அவளுக்கு மனம் உடையும். ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களுக்கு ஒளி விளக்கேற்றி உயர்ந்த இடத்துக்கு அமர வைப்பவர்கள் அன்னையர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை அருகே வானகரத்தில் சரக்கு வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு: 6 மாத குழந்தை, தாய் உள்பட மூவா் காயம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

